ADDED : செப் 04, 2026 03:41 AM

பொ ங்கல், ஆயுத பூஜை, தீபாவளிக்கு மறுநாள் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்.
நாளிதழ் இன்னும் வரலையே.. என்பதுதான்; இந்த மூன்று நாட்களும் நாளிதழ்கள் வெளிவராது என்று தெரிந்தாலும் அன்றாடம் பழகிவிட்ட ஒரு விஷயம், அதிகாலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது என்னவோ நிஜம்.
இந்த நாளிதழ்களை, நாம் இருக்கும் இடம் தேடிக் கொண்டு வந்து கொடுப்பவர்கள் 'முகவர்கள்' எனப்படும் ஏஜென்டுகள் தான். புயலோ, மழையோ, இருட்டோ, வெளிச்சமோ அதிகாலை 4:00 மணிக்கு எல்லாம் எழுந்து சைக்கிளை மிதித்துக் கொண்டு அந்தந்த ஊர் சந்திப்பில் வந்திருக்கும் நாளிதழ் கட்டுகளை பிரிக்கும் போதே, அவர்கள் முகத்தில் அலாதி மகிழ்ச்சி தெரியும்.
இன்றைய நாளிதழில், என்ன செய்தி முக்கியமாக வந்திருக்கிறது என்பதை எல்லாம் கூட ஏறிட்டும் பார்க்க மாட்டார்கள் அவர்கள்.
எத்தனை நாளிதழ் வந்திருக்கிறது, போஸ்டர்கள் எவ்வளவு வந்து உள்ளது. எண்ணிக்கை சரியாக உள்ளதா, சப்ளிமெண்ட் உண்டா? இதுதான் அவர்களது எண்ண கேள்வியாக இருக்கும்.
அடுத்தடுத்த சில நிமிடங்களில் 20.. 50.. 100 என்று எண்ணப்பட்டு முகவர்களின் கை (பை)க்கு பேப்பர்கள் வந்து சேரும்.
அதற்கு முன்னரே விடிந்து முடியாத அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு டீயை குடித்துவிட்டு சைக்கிளில் நாளிதழ்கள் நிறைந்த பையை தொங்க விட்டுக்கொண்டு.. சர் என்று வண்டி கிளம்பும்.
அடுத்தடுத்து வீடுகளில் வரிசையாய் வினியோகம். சார் பேப்பர்... அக்கா பேப்பர்... அண்ணே பேப்பர்... அம்மா பேப்பர்... இந்த நான்கில் ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரிக்காமல் அவர்கள் அந்த இடத்தை விட்டு செல்வதில்லை.
அந்த அளவிற்கு ஒரு நாளிதழ் இனம் தெரியாத குடும்பங்களை இந்த சங்கிலியில் இணைத்துக் கொண்டிருக்கிறது.
காலையில் எழுந்ததும் சுடச்சுட நாளிதழை படிக்கும் ஸ்டைலே தனி தான் என்று சிலாகித்து சொல்லும் சீனியர் சிட்டிசன்களை கேட்டுப்பாருங்கள் ஏஜென்டுகளை பற்றி அவ்வளவு பெருமையாக சொல்வார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் ஏஜென்டுகளுக்கு இருக்கும் மவுசு தனி தான். தினமலர் பவள விழா கொண்டாடும் இந்த நன்னாளில் வரும், 'தேசிய நாளிதழ் வினியோகஸ்தர்கள்' தினமான இன்று, நமது நாளிதழை வாசகர்கள் கையில் சேர்ப்போர் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
