ADDED : ஜூன் 24, 2026 12:14 AM

கார்வார்: ''மனநோய்க்கு சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை, எல்லாபூர் எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் சாடியுள்ளார்.
எல்லாபூரில் அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் தான் நான் உட்பட, 17 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., வுக்கு வந்தோம். ஆனால் எங்களை பணம் கொடுத்து அழைத்து வந்ததாக, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
எங்களுக்கு பணம் கொடுத்தது யார், எவ்வளவு கொடுத்தனர் என்பதை அவர் ஆவணங்களுடன் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று, அவருக்கு இருக்கும் மனநோய்க்கு சிகிச்சை பெற்று கொள்ளட்டும்.
நாங்கள் செய்த தியாகத்தால் தான் ஈஸ்வரப்பா அமைச்சரானார். பதவி, அதிகாரத்தை அனுபவித்தார். கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கால் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
