மாணவர் மீது தாக்குதல்: துனியா விஜய் மகன் மீது போலீசில் புகார்
மாணவர் மீது தாக்குதல்: துனியா விஜய் மகன் மீது போலீசில் புகார்
ADDED : செப் 02, 2026 12:54 AM

பெங்களூரு: காரை முந்தி சென்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக மாணவரை தாக்கியதாக, நடிகர் துனியா விஜய் மகன் சாம்ராட் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துனியா விஜய். பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கிறார். இவரது மகன் சாம்ராட், 21. தனியார் கல்லுாரியில் படிக்கிறார். இந்த கல்லுாரியில் மனீஷ் கவுடா, 21, என்பவரும் படிக்கிறார்.
நேற்று முன்தினம் கெங்கேரி பகுதியில் சாம்ராட்டும், அவரது நண்பர்களும் ஜீப்பில் சென்றனர்.
இந்த நேரத்தில் மனீஷ் கவுடாவும், அவரது நண்பர்களும் காரில் சென்றனர்.
சாம்ராட் சென்ற ஜீப்பை, மனீஷ் கவுடா காரில் முந்தி சென்றார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று மதியம் கல்லுாரி முடிந்ததும் மனீஷ் கவுடா சாலையில் நின்றார்.
அங்கு காரில் வந்த சாம்ராட், அவரது நண்பர்கள் மனீஷை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்று சரமாரியாக தாக்கிவிட்டு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கி விட்டு சென்று உள்ளனர்.
இதுகுறித்து, மனீஷ் கவுடா வக்கீல் மஞ்சுநாத்துடன் சென்று, சாம்ராட் உட்பட, ஆறு பேர் மீது கெங்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.
