மாணவர்களுக்கு தரமற்ற ஷூ 'உப லோக் ஆயுக்தா' வழக்கு பதிவு
மாணவர்களுக்கு தரமற்ற ஷூ 'உப லோக் ஆயுக்தா' வழக்கு பதிவு
ADDED : செப் 12, 2026 04:35 AM
பெங்களூரு: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஷூ, சாக்ஸ்கள் தரமானதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, லோக் ஆயுக்தாவில் வழக்கு பதிவாகி உள்ளது.
கர்நாடகாவில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாநில அரசு இலவசமாக ஷூ, சாக்ஸ் வழங்குகிறது. ஆண்டு தோறும் சரியான நேரத்துக்கு ஷூ, சாக்ஸ் வழங்குவது இல்லை. பள்ளிகள் திறந்து இரண்டு, மூன்று மாதங்கள் கடந்த பின், வழங்குவது வழக்கம்.
இம்முறையும் தாமதமாக ஷூ, சாக்ஸ்கள் வழங்கப்பட்டன. இதை அணிந்த சில நாட்களிலேயே கிழிந்துள்ளன; தையல்கள் பிரிந்துள்ளன. இவை பயன்படுத்த தகுதியானதாக இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கிய ஷூ, சாக்ஸ்கள் தரமானவையா என்பதை, ஆய்வு செய்யாமல் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இது குறித்து, ஊடகங்களில் வெளியான செய்திகள், பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில், பள்ளி கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைமை செயல் நிர்வாக அதிகாரி தலைமையில், சிறப்பு பரிசீலனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அந்தந்த மாவட்டங்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஷூ, சாக்ஸ் தரத்தை பரிசீலித்து, துறை கமிஷனரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
அனைத்து அறிக்கைகளையும், ஆய்வு செய்து கமிஷனர் விரிவான அறிக்கையை, துறையின் மேலதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவரது அறிக்கை அடிப்படையில், கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.
இதற்கிடையே, மாணவர்களுக்கு தரமற்ற ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்பட்டதை, ஊடகங்கள் மூலமாக அறிந்த உப லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா, தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளார்.
