சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் திடீர் தீ விபத்து
சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் திடீர் தீ விபத்து
ADDED : மே 03, 2026 11:35 PM
ராய்ச்சூர்: ராய்ச்சூரின் சிந்தனுாரில் பசனகவுடா அறக்கட்டளை சார்பில், 151 ஏழை ஜோடிகளுக்கு, நேற்று கூட்டு திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்றார். திருமணம் முடிந்ததும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில், அரசின் சாதனைகள் பற்றி பேசினார். பின், மேடையில் இருந்து இறங்கி ஊடகத்தினரை சந்தித்தார்.
இந்த நேரத்தில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே, மேடையில் பேசி கொண்டு இருந்தார். திடீரென மேடையின் படிக்கட்டு பகுதியில் தீப்பிடித்து திரை சீலை எரிந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார், தீயணைப்பு படையினர் தீ தடுப்பு உபகரணங்கள் மூலம் தீயை அணைத்தனர்.
அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரேயை மேடையில் இருந்து கீழே இறங்கினர். தீயை அணைத்த பின், மீண்டும் நிகழ்ச்சி நடந்தது. தீயை உடனே அணைத்ததால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மின்கசிவால் தீ விபத்து நடந்தது தெரிந்து உள்ளது.
