பா.ஜ., ரவி வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் ஆதரவாளர்கள் கிழித்ததால் திடீர் பரபரப்பு
பா.ஜ., ரவி வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் ஆதரவாளர்கள் கிழித்ததால் திடீர் பரபரப்பு
ADDED : ஜூலை 26, 2026 11:57 PM

சிக்கமகளூரு: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக பதிவான வழக்கில், விசாரணைக்கு ஆஜராக, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி வீட்டில், போலீசார் ஒட்டிய 'நோட்டீஸ்' கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் முன் காங்கிரசார் போராட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிக்கமகளூரில் கடந்த 23ம் தேதி, பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது.
அதில், அக்கட்சி எம்.எல்.சி., ரவி பேசுகையில், 'நீட் தேர்வுக்கும், முஸ்லிம்களின் ஒரு பகுதியான முல்லாக்களுக்கும் என்ன சம்பந்தம்...' என கேள்வி எழுப்பி இருந்தார். முஸ்லிம் சமூகத்தை அவமதித்து விட்டதாக, சிக்கமகளூரு ஜாமியா மசூதி தலைவர் முதாசிர் பாஷா அளித்த புகாரில், ரவி மீது வழக்குப்பதிவானது.
இந்நிலையில், நேற்று மதியம் சிக்கமகளூரு டவுனில் உள்ள ரவி வீட்டிற்கு சென்ற, சிக்கமகளூரு டவுன் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவரிடம் நோட்டீஸ் கொடுத்தனர்.
நோட்டீஸை வாங்க மறுத்த ரவி, என்ன அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளீர்கள்; நான் முஸ்லிம்களை பற்றி எதுவும் பேசவில்லை; காங்கிரசார் பேசுவது பற்றி நாங்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளீர்களா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதனால் வேறு வழியின்றி, அவரது வீட்டின் சுவரில், போலீசார் நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவியின் ஆதரவாளர்கள், போலீசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அங்கிருந்து போலீசார் சென்று விட்டனர். அவர்கள் சென்றதும் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசை ரவியின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரவி அளித்த பேட்டியில் கூறுகையில், ''முஸ்லிம்களை பற்றி இதற்கு முன்பும் நான் பேசியது இல்லை; இனியும் பேச மாட்டேன். சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்தும் முல்லாக்களை பற்றி மட்டுமே இதற்கு முன் பேசி இருக்கிறேன். இனியும் தொடர்ந்து பேசுவேன்.
''அவர்களை பற்றி பேச கூடாது என்று கைது செய்தாலும் அதற்கும் தயாராக உள்ளேன். யாருடைய பேச்சையோ கேட்டு, என் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அரசின் கைப்பாவையாக போலீசார் செயல்பட கூடாது,'' என்றார்.
