தாய் இறப்பில் சந்தேகம்: உடலை தோண்டி எடுத்த மகன்கள்
தாய் இறப்பில் சந்தேகம்: உடலை தோண்டி எடுத்த மகன்கள்
ADDED : ஜூலை 19, 2026 11:25 PM

தாவணகெரே: 'தாயின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை. போலீசார் வழக்கை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்' என, குற்றம்சாட்டிய மகன்கள், மூன்று மாதங்களுக்கு முன், புதைக்கப்பட்ட தாயின் உடலை தோண்டி எடுத்து, பைக்கில் மாவட்ட மருத்துவமனைக்கு வரும் வழியில் விபத்து நிகழ்ந்ததால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகாவின் ஆதாபுரா கிராமத்தில் வசித்தவர் ஈரம்மா, 54. இவருக்கு மஞ்சுநாத், 30, வெங்கடேஷ், 25, என்ற மகன்கள் உள்ளனர்.
நடப்பாண்டு ஏப்ரல் 29ம் தேதியன்று, ஈரம்மா மர்மமான முறையில் இறந்தார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டினருக்கும் முன் பகை இருந்தது. அவர்களே, தங்களின் தாயை கொலை செய்தனர் என, மலேபென்னுார் போலீஸ் நிலையத்தில், மகன்கள் மஞ்சுநாத், வெங்கடேஷ் புகார் அளித்தனர்.
ஒப்படைப்பு போலீசாரும் உடலை பிரேத பரிசோதனை நடத்தினர். அதன் பின், மகன்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் இறுதிச்சடங்கு செய்து, தாயின் உடலை புதைத்தனர். அதன் பின் புகார் குறித்து, விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் மன்றாடியும், அவர்கள் பொருட்படுத்தவில்லை.
பலமுறை, போலீஸ் நிலையத்துக்கு அலைந்தனர். தாயின் கொலை வழக்கை, போலீசார் மூடி மறைக்க முயற்சிப்பதாக மகன்கள் சந்தேகித்தனர்.
'முதலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தி, உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். ஆனால், பயனில்லை. எனவே, வெறுப்படைந்த மகன்கள், தாயின் உடலை தாங்களே, பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர்.
விபத்து நேற்று முன் தினம் நள்ளிரவு அண்ணனும், தம்பியும் மயானத்துக்கு சென்று, தாயின் உடலை தோண்டி வெளியே எடுத்தனர். அவரின் உடலை போர்வையால் சுற்றி, பைக்கில் வைத்து, மாவட்ட மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
தாவணகெரே புறநகரில் வரும் போது, எதிர்பாராமல் பைக் விபத்துக்குள்ளானது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், போர்வையால் சுற்றப்பட்டு கிடந்த உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மகன்களிடம் விசாரித்த போது, உடல் தங்கள் தாய் என கூறி, நடந்ததை விவரித்தனர். அதன் பின், உடலை, தாவணகெரே மாவட்ட மருத்துவமனைக்கு, போலீசார் கொண்டு சென்றனர்.
'தங்கள் தாயின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். மூத்த டாக்டர்கள் மூலம் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்' என, வலியுறுத்துகின்றனர். போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
