/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டத்தை கையில் எடுப்பதா? பரமேஸ்வர் கண்டிப்பு
/
சட்டத்தை கையில் எடுப்பதா? பரமேஸ்வர் கண்டிப்பு
ADDED : ஜூலை 01, 2025 03:38 AM

பெங்களூரு: ''சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும் உரிமை, போலீசாருக்கு மட்டுமே உள்ளது,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெலகாவி மாவட்டத்தில், மாடு கடத்திய வாகனத்தை விரட்டிச் சென்ற ஸ்ரீராமசேனை பிரமுகர்கள், இங்காலி கிராமத்தில் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தபோது, அங்கு கூடிய அக்கிராமத்தினர், அமைப்பினரை தாக்கி, தென்னை மரத்தில் கட்டி வைத்தனர்.
தண்ணீர் குடிக்க வைத்து தொடர்ந்து உருட்டு கட்டையால் தாக்கினர். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது.
இதுகுறித்து பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று அளித்த பேட்டி:
சட்ட விரோத செயல்பாடுகளை கண்டறிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சட்டத்தை பாதுகாப்பது போலீசாரின் பணி. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது.
மாடு கடத்தப்பட்டால் போலீசாருக்கு தெரிவிக்காமல், எதற்காக அவர்களே அப்பணியை செய்கின்றனர்? ஹிந்து அமைப்பினரை எதற்காக மரத்தில் கட்டி வைத்து அடித்தனர் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் அரசு காலத்தில், அதிக பசு வதை நடந்தது; பா.ஜ., அரசு காலத்தில் நடக்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டவிரோதமாக பசுக்கள் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.