ஒவ்வொரு மாவட்டத்திலும் திறமையான இளைஞர்கள் இளம்பெண்களை உருவாக்க வேண்டும்: சோமண்ணா
ஒவ்வொரு மாவட்டத்திலும் திறமையான இளைஞர்கள் இளம்பெண்களை உருவாக்க வேண்டும்: சோமண்ணா
ADDED : ஆக 28, 2026 02:36 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் திறமையான ஒரு இளைஞர்கள், இளம் பெண்களை உருவாக்குவதே நம் நோக்கம்,'' என, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி, பெங்களூரு எம்.எஸ்.ராமையா சட்டக்கல்லுாரியில் நேற்று கேலோ இந்தியா உரையாடல் நிகழ்ச்சியை துவக்கி வைத்த மத்திய இணை அமைச்சர் சோமண்ணா, ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தை நினைவு கூர்ந்தார்.
பின், அவர் பேசியதாவது:
இந்தியாவில் விளையாட்டு துறையை வலுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 12 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு ஊக்கமளித்து வருகிறது. இந்தாண்டு ஜூலை-க்குள் நாடு முழுவதும் 1,067 கேலோ இந்தியா மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
மேலும், 3,176 கோடி ரூபாய் செலவில், 349 விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் வெற்றி என்பது பதக்கங்களை வெல்வது மட்டுமல்ல, ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, குழு உணர்வு, தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம், நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பான்மை ஆகியவற்றை கற்றுக் கொடுக்கிறது.
நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில், 'கேலோ இந்தியா இயக்கம்' அறிவிக்கப்பட்டது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், விளையாட்டு பொருட்களின் உள்நாட்டு உற்பத்திக்கு, 500 கோடி ரூபாய்க்கு சிறப்பு மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் திறமையான ஒரு இளைஞர்கள், இளம் பெண்களை உருவாக்குவதே நம் நோக்கம்.
ஒரு இளைஞராக, '2047ல் வளர்ந்த இந்தியா' என்ற கனவை நனவாக்க வேண்டும். அதற்கு எனது கல்லுாரி, எனது சமூகம், எனது கர்நாடகா, எனது நாட்டுக்காக நான் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த மனப்பான்மையே இளைஞர் சக்தியை, தேசிய சக்தியாக மாற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
