புத்த துறவி கொலை வழக்கு மஹாராஷ்டிராவின் மூவர் கைது
புத்த துறவி கொலை வழக்கு மஹாராஷ்டிராவின் மூவர் கைது
ADDED : மே 06, 2026 04:46 AM

தார்வாட்: புத்த துறவியிடம் பணம் இருக்கும் என நம்பி அவரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டி கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தார்வாட் நகரின் புறவழி சாலை அருகில் கடந்த ஏப்., 28ம் தேதி புத்த துறவி ஒருவர் சாலை ஓரத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்திருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால், பிரேத பரிசோதனையில், இது கொலை என்பது தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட ஒரு காரின் நம்பர் பிளேட் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், முண்டகோடா அருகில் உள்ள பெட்ரோல் பங்கில், வாகனத்துக்கு சி.என்.ஜி., நிரப்புவதற்காக, காரில் இருந்து மூவர் இறங்கினர்.
அவர்கள் குறித்து விசாரித்த போது, மஹாராஷ்டிரா மாநிலம், கோலாபூரை சேர்ந்த சங்கத் யாதவ், 24, வைபவ் சவான், 30, சித்தேஷ் போஸ்லே, 18, என தெரியவந்தது.
அவர்களை கைது செய்து விசாரித்தபோது, தார்வாடில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த புத்த துறவி தாஷி தோண்டுவிடம் பணம் இருக்கும் என்று எண்ணினர்.
எனவே, அவரை தங்களின் காரில் கடத்தி, அடித்து உதைத்து பணம் கேட்டனர். அவரிடம் பணம் இல்லை என்று கூறியபோது, அவரை தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரை சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றதாக ஒப்புக் கொண்டனர்.
அவர்களை கைது செய்தனர்.
