சிறுமி கொன்று புதைப்பு: சிறுவன் உட்பட மூவர் கைது
சிறுமி கொன்று புதைப்பு: சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 18, 2026 11:02 PM
ராம்நகர்: காதலி மீதான சந்தேகத்தால், அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து, உடலை தோட்டத்தில் புதைத்த 16 வயது காதலர் உட்பட, மூவர் கைது செய்யப்பட்டனர்.
ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவின், கெம்பலநாத கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ், 16. இவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தினக்கூலியாக பணியாற்றி வந்தார். இவரும், 16 வயது சிறுமி ஒருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு முன், அந்த சிறுமியை, சுரேஷ் தன் கிராமத்துக்கு அழைத்து வந்தார். இவரது வீடு அருகில் உள்ள பண்ணை வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அந்த சிறுமி, கடந்த ஜூலை 10ம் தேதியன்று, வேறொரு இளைஞருடன் மொபைல் போனில் பேசியதை சுரேஷ் கவனித்து விட்டார். இதனால், அவர் அந்த சிறுமியை தாக்கி, நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொன்றார். தன் அண்ணன் புட்டநாதா, 19, சித்தப்பா ஹரிஷ், 40, ஆகியோர் உதவியுடன், அந்த சிறுமியின் உடலை தங்களின் தோட்டத்தில் புதைத்தார்.
மது அருந்திய சுரேஷ் உளறியதால், அந்த சிறுமியை மூவரும் கொன்ற தகவல் ஊரில் பரவியது.அது, அந்த சிறுமியின் பெற்றோர் காதுகளுக்கும் சென்றது. கோடிஹள்ளி போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற போலீசார், தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை, நேற்று தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறியதாவது:
சிறுமியை கொலை செய்தது தொடர்பாக, மூவரை கைது செய்துள்ளோம். கொலைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளோம். கொலை செய்து, சிறுமியை புதைத்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
