ADDED : ஜூன் 07, 2026 11:41 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில், செயற்கை நுண்ணறிவு கொள்கை வடிவமைப்பில் மூத்த ஆலோசகராக பணியாற்றி வந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், 42, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
சென்னையில், 1984ல் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், 2005ல், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டத்தை பெற்றார். 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தில் சேர அமெரிக்கா சென்றார்.
அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், அவரது நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவின் கொள்கை வடிவமைப்பின் மூத்த ஆலோசகராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார்.
தன் பணி காலத்தில், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கான போட்டியில் அமெரிக்காவை உலகளவில் முன்னணியில் இருக்க முக்கிய பங்காற்றினார்.
இத்தகைய சாதனைகளை செய்த ஸ்ரீராம், தன் பதவியில் இருந்து இம்மாத இறுதியுடன் விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகினாலும், டிரம்ப் அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வெளியில் இருந்து தொடர்ந்து வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் பதவி விலக சில அரசியல் சர்ச்சைகளே காரணம் என, கூறப்படுகிறது. வெளிநாட்டவருக்கான விசா வழங்குவது, 'கிரீன் கார்டு' வழங்குவதில் டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடிகளால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
