கர்நாடகாவின் 5 வாக்குறுதி திட்டங்களை டிரம்ப் காப்பி அடிக்கிறார்: சிவகுமார்
கர்நாடகாவின் 5 வாக்குறுதி திட்டங்களை டிரம்ப் காப்பி அடிக்கிறார்: சிவகுமார்
ADDED : செப் 13, 2026 11:26 PM

பெங்களூரு: ''கர்நாடகாவின் ஐந்து வாக்குறுதி திட்டங்களை, அமெரிக்க அதிபர் டிரம்ப் காப்பி அடிக்கிறார்,'' என, முதல்வர் சிவகுமார் கூறினார்.
பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
ம.ஜ.த., தலைவர் குமாரசாமிக்கு மத்தியில் பெரிய துறையின் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அந்த பதவியின் மூலம், கர்நாடகாவில் 50 ஆயிரம் பேருக்கு அவர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவர் விரும்பும் இடத்தில் நிலம் கையகப்படுத்தட்டும். ஆனால் அவர், என்னை பதவியில் இருந்து நீக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார். குமாரசாமியால், அசோக், விஜயேந்திராவின் கதை முடிய போகிறது.
குமாரசாமியிடம் 'பென் டிரைவ்' உள்ளது. அதை வைத்து அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும். சட்டசபை முறையாக நடக்க எதிர்க்கட்சிகள் விடவில்லை. அவர்கள் எங்களை நோக்கி கதாயுதத்தை சுழற்றட்டும். அம்பு எய்யட்டும். அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
ஐந்து வாக்குறுதி திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியாது என்றனர். ஆனால் எங்கள் வாக்குறுதி திட்டங்கள் தான் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளன. மற்ற மாநிலங்களும் எங்கள் திட்டங்களை பின்பற்றுகின்றன. வாக்குறுதி திட்டங்களை அமெரிக்க அதிபர் டிரம்பும் காப்பி அடிக்கிறார். எங்களது வாக்குறுதி திட்டங்கள் உலகம் முழுதும் பரவியுள்ளன.
பா.ஜ., ஆட்சியில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே வாக்குறுதி திட்ட பலன்கள் கிடைக்கின்றன. ஆனால், கர்நாடகாவில் அனைவருக்கும் கொடுக்கிறோம். 2028 தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். இளைஞர்களிடையே தலைமை பண்பு வளர்க்கவும், ஜாதியை ஒழிக்கவும், பாரத் ஜோடோ சங்கங்கள் துவங்கி உள்ளோம்.
நமது நாட்டில் சிறுபான்மையினர் எதிரிகளை போல நடத்தப்படுகின்றனர். இரட்டை இன்ஜின் அரசு பதவியில் இருந்த போது, கர்நாடகாவுக்கு என்ன செய்தனர்...
எங்கள் கட்சியில் பழையவர், புதியவர் என்ற பாகுபாடு இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலில் தோற்றாலும் எம்.எல்.சி., ஆக்கினோம். லட்சுமண் சவதியை அமைச்சராக்கி உள்ளோம். எங்களை நம்பியவர்களை கைவிடவில்லை. எங்களிடம் இருந்து பா.ஜ., பக்கம் சென்றவர்களும் திரும்பி வர தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
