கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரண்டு ஊழியர்கள் உயிரிழப்பு?
கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரண்டு ஊழியர்கள் உயிரிழப்பு?
ADDED : ஜூன் 20, 2026 03:31 AM

வர்த்துார்: கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் விழுந்த இரண்டு ஊழியர்களும் உயிரிழந்திருக்கலாம் என, மீட்பு பணி வீரர்கள் சந்தேகித்து உள்ளனர்.
பெங்களூரு வர்த்துாரில், பெங்., குடிநீர், வடிகால் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை, சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் மூன்று ஊழியர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
ஏணியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறிய இரண்டு ஊழியர்கள், 40 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தனர். தொட்டியில், 10 அடி ஆழத்திற்கு கழிவு நீர் இருந்தது.
இதை பார்த்த மற்றொரு ஊழியரான கார்த்தி, அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தொட்டியிலிருந்து வெளியேறி சக ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக வர்த்துார் போலீசார், குடிநீர் வாரிய அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். என்.டி.ஆர்.எப்., எனும் தேசிய பேரிடர் மீட்பு படையும் களத்தில் இறங்கியது.
கழிவுநீர் தொட்டியில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபடும் போது, விஷ வாயு தாக்கத்திலிருந்து தப்பிக்க, தொட்டிக்குள் ஆக்ஸிஜன் அதிகளவு செலுத்தப்பட்டது. பின், என்.டி.ஆர்.எப்., வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தொட்டிக்குள் இறங்கினர். இருப்பினும், நேற்று இரவு வரை ஊழியர்களை மீட்க முடியவில்லை.
'இரண்டு ஊழியர்களும் மாயமாகி, 24 மணி நேரத்திற்கும் மேலானதாலும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாததாலும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
மாயமான ஊழியர்கள் பீஹாரை சேர்ந்த பிரிஜேஷ் குமார், 30, தமிழகத்தை சேர்ந்த அகிலேஷ், 30, என மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா, சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
