நிலத்தடி நீரை முறையாக பயன்படுத்தாததால் தங்கவயலில் தண்ணீர் தட்டுப்பாடு
நிலத்தடி நீரை முறையாக பயன்படுத்தாததால் தங்கவயலில் தண்ணீர் தட்டுப்பாடு
ADDED : ஆக 22, 2026 11:24 PM
தங்கவயல்: தங்கவயலில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, நிலத்தடி நீரை முறையாக பயன்படுத்தாதது தான் காரணம் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தங்கவயலின் மேற்கே உள்ள பாலாறு மண்டலத்தில் சுத்தமான குடிநீர் வளம் உள்ளது. இதன் இருப்பை ஆங்கிலேயர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தனர்.
விவாத விஷயம் இந்த நீரை சேமிப்பதற்காக, ஆங்கிலேயர்கள் கிணறுகளைத் தோண்டி தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கினர்.
ஒருபுறம் பேத்தமங்களா நீர்த்தேக்கத்தின் நீரும், மறுபுறம் பாலாறு மண்டலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீரும் இருந்ததால், குடிநீர் பற்றாக்குறை என்ற பிரச்னையே இருந்ததில்லை.
தற்போது தங்கச்சுரங்க குடியிருப்புகளில் மக்கள்தொகை கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் நவீன கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கும் நீரை பயன்படுத்துவதா; வேண்டாமா என்பது தான் விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது.
பெமல் தொழிற்சாலையின் அருகில் தொடங்கும் பாலாறு மண்டலப் பகுதி எப்போதுமே நீர்ப்பிடிப்பு பகுதியாகவே உள்ளது. மழைக்காலத்தில் சுரங்கத்தில் உள்ள நீர் வெளியேறும். இப்போதும் கூட அஜ்ஜனப்பள்ளி அருகில் பாலாறு பகுதியில் தான் அதிகபட்சமாக ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.
சுரங்க குடியிருப்பு இங்கு 100 முதல், 120 அடி ஆழத்திற்குள் தண்ணீர் கிடைக்கிறது. இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை நவீன தொழில்நுட்பத்துடன் முறையாக பயன்படுத்தினால் நமக்கு தேவையான சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்கிறார் முன்னாள் நகராட்சித் தலைவர் தயானந்தா.
உலகமதி, சாம்பியன் டோபிகாட், மக்ஸின் போன்ற பகுதிகளில் தோண்டப்பட்ட பழைய ஆழ்துளை கிணறுகளின் மேற்பரப்பில் இன்னும் தண்ணீர் உள்ளது. ஆனால் பம்பு செட்டுகளின் பராமரிப்பு மற்றும் மோட்டார் திருட்டு ஆகியவற்றால் சோர்வடைந்த தங்கச் சுரங்க முன்னாள் அதிகாரிகள், இந்த பகுதியில் கவனம் செலுத்தவில்லை என்று சுரங்க குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
உள்ளூரில் நாகவரா ஓடை உள்ளது. இது ஒரு வனப்பகுதியாகவும், ஓரளவு மலை பாங்கானதாகவும் உள்ளன. இங்குள்ள பாறைகள் அடுக்குகளாக உள்ளன. எனவே ஆழ்துளை கிணறு தோண்டி மோட்டாரை பொருத்தி, நேரடியாக தண்ணீரை எடுப்பது சாத்தியமில்லை. ஆகையால் ஆங்கிலேயர், பாறை அடுக்குகளுக்கு இடையில் தொடர்ந்து பாயும் தண்ணீரை சேகரித்து அதை மேலே கொண்டு வந்து பயன்படுத்தினர்.
கோரமண்டல் பகுதியில் இருந்து நாகவரா ஓடைப் பகுதி வரை பாலாறு மண்டல நீர் வரத்து உள்ளது. தங்கச்சுரங்கம் மூடப்பட்ட பின், சுரங்கப் பாதைகள் நீரால் நிரப்பப்பட்டன.
எனவே சமீப காலங்களில் நிலநடுக்கங்கள் குறைந்துள்ளன. சுரங்கத்திற்குள் நிரம்பிய நீர், மேலே எடுக்கப்பட்டால், அந்த நீரின் அளவு குறைந்து, வெப்பம் உருவாகும். இது நில நடுக்கங்களை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது.
நாகவரா அருகே ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்கி, அதில் சேமிக்கப்படும் நீரை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று புவியியல் நிபுணர் நாகராஜ் கூறுகிறார்.
