தேர்தல் ஆணைய அச்சுறுத்தலுக்கு பணிய மாட்டோம்: சித்தராமையா காட்டம்
தேர்தல் ஆணைய அச்சுறுத்தலுக்கு பணிய மாட்டோம்: சித்தராமையா காட்டம்
ADDED : ஏப் 09, 2026 02:13 AM

பெங்களூரு: ''சொன்னதை செய்யும் அரசு என்று அறியப்படும் எங்கள் அரசு, தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பணியாது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றும். ஒவ்வொரு கன்னடருக்கும் வழக்கம் போல் தொடர்ந்து சேவை செய்யும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
தாவணகெரே, பாகல்கோட் மாவட்டங்களில் நடக்கும் இடைத்தேர்தலின் போது, வாக்குறுதி திட்டங்களின் கீழ் விடுக்கப்பட்ட நிதிகள் குறித்த தகவல்களை வழங்க கோரி, இந்திய தேர்தல் ஆணையம், மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
எப்போது? இதற்கு முதல்வர் சித்தராமையா நேற்று தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
எங்கள் வாக்குறுதி திட்டங்கள், இந்த இடைத்தேர்தலின் போது செயல்படுத்தப்பட்டவை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவை, 2023 சட்டசபை தேர்தலில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, எங்கள் அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகும்.
இத்திட்டங்களின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து பயனாளிகளின் கணக்கிற்கும் பணம் தவறாமல், வெளிப்படையாக அனுப்பப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதியே தவிர, வாக்காளர்களை கவரும் திட்டங்கள் அல்ல.
வாக்குறுதி திட்டங்கள் தொடர்பாக பா.ஜ, இரட்டை நிலைபாட்டை கடைபிடித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒரு புறம் அவர்கள் கர்நாடகாவின் வாக்குறுதி திட்டங்களை அபத்தமான திட்டம் என்று கேலி செய்கின்றனர். மறுபுறம், அதே வாக்குறுதிகளை பின்பற்றி, தாங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் அவற்றை செயல்படுத்துகின்றனர்.
நாடு முழுதும் கர்நாடகாவின் திட்டம் உத்வேகம் அளித்து உள்ளது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
செயல்முறை இருப்பினும் இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம், பின்பற்றும் கொள்கை கேள்விக்குரியதாக உள்ளது. மஹாராஷ்டிரா, பீஹார் போன்ற மாநிலங்களில், தேர்தலுக்கு முன்பே பண பரிமாற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்தகைய திட்டங்களின் செயல்முறை விரைவுபடுத்தப்பட்டது.
திட்டங்களின் பலன்கள் நேரடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் வெளிப்படையாகவே செய்யப்பட்டு உள்ளன. இருந்தபோதும், தேர்தல் ஆணையம் மவுனம் காத் து, எந்தவித ஆய்வும் செய்யாமல் இத்திட்டங்களை தொடர அனுமதித்து உள்ளது. இது பாரபட்சமற்ற நடவடிக்கை அல்ல; இது ஒரு கட்சிக்கு அளிக்கப்படும் ஒத்துழைப்பாகும்.
கர்நாடகாவின் வாக்குறுதி திட்டங்களை குறிவைப்பது வெறும் அரசியல் நோக்கம் கொண்டது மட்டுமல்ல, ஏழைகள், பெண்கள், கர்நாடகா மீதான மறைமுக தாக்குதலாகும்.
சொன்ன தை செய்யும் அரசு என்று அறியப்படும் எங்கள் அரசு, தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பணியாது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றும். ஒவ்வொரு கன்னடருக்கும் வழக்கம் போல் தொடர்ந்து சேவை செய்யும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
