விதான் சவுதா கட்டியது எதற்காக? அமைச்சர் குமாரசாமி கேள்வி!
விதான் சவுதா கட்டியது எதற்காக? அமைச்சர் குமாரசாமி கேள்வி!
ADDED : செப் 19, 2026 11:34 PM

பெங்களூரு: ''அமைச்சரவை கூட்டம் நடத்தவே, விதான் சவுதா கட்டப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அமைச்சரவை கூட்டம் நடத்த பெருமளவு பணத்தை செலவழிக்கின்றனர்,'' என, மத்திய, கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவே, பெங்களூரில் விதான் சவுதாவை கெங்கல் ஹனுமந்தையா கட்டினார். தற்போதைய அரசோ, மாவட்டந்தோறும் அமைச்சரவை கூட்டம் நடத்த பெருமளவில் பணத்தை செலவழிக்கிறது.
வெளி மாவட்டங்களில் அமைச்சரவை கூட்டம் நடத்த செலவாகும் தொகையை, விவசாயிகளுக்கு கொடுத்தால், அவர்களுக்கு உதவியாக இருக்கும். மாநில அரசு நிதியின்றி திண்டாடும் வேளையில், இந்த செலவு தேவையா...
மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை; கால்நடைகளுக்கு தீவனம் இல்லை.
கஸ்துாரி ரங்கன் அறிக்கை தொடர்பாக மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்று தான். எந்த சூழ்நிலையிலும் இந்த அறிக்கையை செயல்படுத்தக்கூடாது. இது, விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருத்து நிலவுகிறது.
இந்த அறிக்கைக்கு, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா என பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
