/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பதவி ராஜினாமா? ராஜண்ணா தீவிர ஆலோசனை!
/
அமைச்சர் பதவி ராஜினாமா? ராஜண்ணா தீவிர ஆலோசனை!
ADDED : ஏப் 07, 2025 10:28 PM

பெங்களூரு; 'ஹனி டிராப்' குறித்து கட்சி மேலிடத்திடம் புகார் செய்ய, அமைச்சர் ராஜண்ணா தயாராகி வருகிறார். தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்தும், தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா தன்னை ஒரு கும்பல் ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி, சட்டசபையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அரசுக்கு எதிராக பா.ஜ., போராடியது. இதனால் ராஜண்ணா மீது காங்கிரஸ் மேலிடம் கோபத்தில் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி சென்ற அவர், மேலிட தலைவர்களை சந்திக்க முயன்றார். ஆனால் முடியாமல் போனது. ஏமாற்றத்துடன் கர்நாடகா திரும்பினார். இந்நிலையில் வரும் 11ம் தேதி மீண்டும் டில்லி செல்ல திட்டமிட்டு உள்ளார்.
இம்முறை எப்படியாவது மேலிட தலைவர்களை சந்தித்து, தன்னை ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றியும், இதன் பின்னணியில் கட்சியில் உள்ளவர்கள் குறித்தும் புகார் அளிக்க தயாராகி வருகிறார்.
தன் மகனும், எம்.எல்.சி.,யுமான ராஜேந்திராவை கொல்ல கூலிப்படை ஏவியது பற்றியும், மேலிட கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளார்.
தான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும், தன் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த ராஜண்ணா, துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர். பக்கத்து மாவட்டமான சித்ரதுர்காவிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. மதுகிரி பொது தொகுதியாக இருந்தாலும், அங்கிருந்து வெற்றி பெற்று தன் செல்வாக்கை காட்டுகிறார்.
முதல்வரின் ஆதரவாளராக இருப்பதாலும், அவரை தக்க வைத்து கொள்ள கட்சி மேலிடம் முயற்சி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

