ADDED : ஜூலை 05, 2026 11:28 PM

- நமது நிருபர் -
மயானம் என்றாலே அங்கு செல்ல ஒரு விதமான தயக்கம் இருக்கும். ஆண்களே இரவில் செல்ல தயங்கும் இடத்தில், ஒரு பெண்ணால் தங்கி செயல்பட முடியுமா என்று எழும் கேள்விக்கு பதிலாக உள்ளார் சுதாராணி. தாவணகெரே டவுன் பி.பி., சாலையில் உள்ளது வைகுந்தா தகன கூடம். இங்கு வரும் உடல்களை தகனம் செய்யும் பணியை சுதாராணி செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது சொந்த ஊர் தாவணகெரே மாய கொண்டா. திருமணத்திற்குப் பின் தாவணகெரே வந்தேன். வைகுந்தா அறக்கட்டளையின் மேலாளராக வேலைக்கு சேர்ந்தேன். இந்த அறக்கட்டளை சார்பில் செயல்படும், தகன மேடையில், இறந்தவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்தன.
மேலாளராக இருந்த நான், நாட்கள் செல்ல செல்ல, உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட ஆரம்பித்தேன். உடல்களை தகனம் செய்யும்போது, மது அருந்துவதுடன், இறந்த உடல்களை மதிக்காமல் தகனம் செய்வர். அது எனக்கு வருத்தமாக இருந்தது. இறந்த உடல்களையும் மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம்.
முதலில் இந்த பணிக்கு வந்தபோது பயமாக இருந்தது. முதல் நான்கு உடல்களை தகனம் செய்த பின், இந்த வேலை எனக்கு பழகிவிட்டது.
கொரோனா நேரத்தில் தினமும் 10 முதல் 15 உடல்களை தகனம் செய்து இருக்கிறேன். இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.
உடல்கள் முழுதும் எரியும் வரை அருகிலேயே காத்திருந்து சாம்பலை எடுத்து, இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு கொடுக்கிறேன். பெரும்பாலான உடல்களின் அஸ்தியை, துங்கபத்ரா ஆற்றில் கரைத்துள்ளேன்.
உடல்களை தகனம் செய்வது எளிதான விஷயம் இல்லை. நெருப்பின் முன்பு மணிக்கணக்கில் நிற்க வேண்டும். இறந்த உடல் எரிந்து சாம்பல் ஆவதை உறுதி செய்ய வேண்டும்.
இறந்த உடல் மீது நெருப்பு மூட்டியதும், ஒரு மணி நேரம் கழித்து, உடலை மரக்கட்டை வைத்து, சரி செய்ய வேண்டும். இங்கு உடலை தகனம் செய்யும் பணியில், நான் மட்டுமே ஈடுபடுகிறேன்.
ஆதரவற்ற உடல்களை தகனம் செய்து, அஸ்தியை கரைத்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
