ADDED : ஜூலை 18, 2026 12:09 AM

தட்சிண கன்னடா: பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர், போலீசாருக்கு பயந்து, எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
தட்சிண கன்னடா பன்ட்வால் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா, 21. இவரை அவரது உறவினரான சேத்தன், 22, ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேத்தன், லாவண்யாவை கத்தியால் குத்தி, நேற்று முன்தினம் மாலை கொலை செய்தார்.
பன்ட்வால் நகர போலீசார் விசாரித்தனர். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசுக்கு பயந்த சேத்தன் தலைமறைவானார்.
ஊருக்கு வெளிப்புறமுள்ள பாழடைந்த வீட்டில் தங்கியிருந்தார். இவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சேத்தன் உடல்நிலை மோசமாக இருந்ததை போலீசார் அறிந்தனர். அவரிடம் விசாரித்ததில், போலீசாருக்கு பயந்து எலி பேஸ்ட் சாப்பிட்டதாக கூறினார். உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எஸ்.பி., அருண்குமார் கூறுகையில்,“சேத்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் குணமடைந்தவுடன், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படும். விசாரணை முடிவில், பல தகவல்கள் தெரிய வரும்,” என்றார்.
