ADDED : மார் 24, 2026 06:21 AM
கொப்பால்: கங்காவதியில் உறவினர் வீட்டுக்கு இரண்டு சரக்கு ஆட்டோவில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த ஒரு ஆட்டோ, மற்றொரு ஆட்டோ மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், இளம் பெண் உயிரிழந்தார். 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொப்பால் மாவட்டம் கங்காவதி தாலுகாவின் மகேபுப நகர், ஜண்டகட்டி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், கொப்பாலுக்கு இரண்டு சரக்கு ஆட்டோக்களில் நேற்று காலை புறப்பட்டனர்.
கங்காவதி ஹிரேபெனக்கல் அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த இவர்கள் பயணித்த சரக்கு ஆட்டோக்களில் ஒன்று, மற்றொரு ஆட்டோவில் மோதியது.
இரு ஆட்டோக்களும் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின.
இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், ரேஷ்மா, 24, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நான்கு வயது ஆயிஷா, மினியாஸ் ஆகியோர் பல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், ஆட்டோவில் இருந்த கஜாபி, மஹபி, முஸ்னி, சுமையா, ஆயிஷா பேகம், ரம்ஜான் பீ, சஜியா, ரஹேமத் பீ, மஹேபு பீ, தஹேரா, மஹேபுரா ரசூல் சாப், ஆட்டோ ஓட்டுநர் ஹிரேபிமப்பா உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.
