ADDED : ஜூலை 19, 2026 11:24 PM
உத்தரகன்னடா: சொகுசு விடுதியில், 'ஜிப்லைன்' விளையாடும் போது, கம்பி அறுந்ததால், 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.
விஜயபுரா நகரில் வசிப்பவர் குபேரா சுரபுரா, 28. இவர், ஜூலை 3ம் தேதியன்று, தன் சகோதரர் பிரசாந்துடன், உத்தர கன்னடா மாவட்டம், தண்டேலிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இங்குள்ள, 'ஸ்டர்லிங் ரிவர் ரிசார்ட்' என்ற சொகுசு விடுதியில் இருவரும் தங்கியிருந்தனர்.
இந்த விடுதியில் குபேரா சுரபுரா, கம்பி மீது தொங்கியபடி செல்லும் ஜிப்லைன் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.
இதை அவரது சகோதரர் பிரசாந்த் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது, கம்பி அறுந்ததால், 40 அடி உயரத்தில் இருந்து, குபேரா கீழே விழுந்தார்.
விழுந்த வேகத்தில் அவரது இரண்டு கைகள், கால்களின் எலும்பு முறிந்தது. நரம்புகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு தண்டேலியின், அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடுதல் சிகிச்சைக்காக விஜயபுராவின், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது நிலை மோசமாக இருந்ததால், மஹாராஷ்டிராவின் மீரஜ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே அறுவை சிகிச்சை நடந்தது. மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
இந்த அசம்பாவிதத்துக்கு, சொகுசு விடுதி ஊழியரின் அலட்சியமே காரணம். எந்த பாதுகாப்பு வசதிகளும் செய்யாமல், ஜிப்லைன் சாகச விளையாட்டுக்கு அனுமதி அளித்ததாக, குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து, சொகுசு விடுதி மேலாளர் கூறியதாவது:
ஜிப்லைன் சாகச விளையாட்டில் ஈடுபட்ட போது, இளைஞருக்கு விபத்து ஏற்பட்டது உண்மை தான். ஆனால் இதில் எங்கள் சொகுசு விடுதியின் ஊழியர்கள் அலட்சியம் இல்லை. தொழில்நுட்ப கோளாறே காரணம். எதிர்பாராமல் நடந்த சம்பவம் அது.
நாங்கள் பொறுப்பில் இருந்து நழுவவில்லை. விரைவில் விஜயபுராவுக்கு சென்று, இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்து, தேவையான உதவிகளை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
