'பிளக் அண்டு பிளே' தொழிற்கூடம் காஞ்சிபுரத்தில் கட்டுகிறது 'சிப்காட்'
'பிளக் அண்டு பிளே' தொழிற்கூடம் காஞ்சிபுரத்தில் கட்டுகிறது 'சிப்காட்'
ADDED : ஜூலை 07, 2024 01:31 AM

சென்னை:காஞ்சிபுரம், வல்லம் வடகாலில், தொழில் நிறுவனங்கள் உடனே தொழில் துவங்கக் கூடிய, 'பிளக் அண்டு பிளே' எனப்படும், தயார் நிலை உற்பத்தி கூடத்தை அமைப்பதற்கான ஆயத்த பணியை 'சிப்காட்' துவக்கியுள்ளது.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், பெரிய தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் பூங்கா அமைத்து வருகிறது.
தற்போது, 20 மாவட்டங்களில், ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி, 41,000 ஏக்கரில், 40 தொழிற்பூங்காக்களை உருவாக்கிஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அங்கு, தொழிற்கூடம் அமைக்க சிறு நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.
தற்போது, சிப்காட் நிறுவனம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள வல்லம் வடகாலில், 1.30 லட்சம் சதுர அடியில், உடனடியாக தொழில் துவங்கக் கூடிய தயார் நிலை உற்பத்தி கூடத்தை அமைக்க உள்ளது.
இதுகுறித்து, சிப்காட் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வல்லம் வடகாலில் ஏற்கனவே, 1,450 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் பெரிய நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
அங்கு கட்டமைப்பு மற்றும் மூலதன செலவை குறைத்து, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க வாய்ப்பளிக்கும் வகையில், முதல் முறையாக, 1.30 லட்சம் சதுர அடியில், உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உற்பத்திக்கூடம் அமைக்கப்பட உள்ளது.
திட்டச் செலவு, 36 கோடி ரூபாய். அங்கு, எந்த நிறுவனம் தொழில் துவங்க விருப்பம் தெரிவித்தாலும், தேவையை பொறுத்து இடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.