தமிழகத்தில் ரூ.20 கோடியில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள்
தமிழகத்தில் ரூ.20 கோடியில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள்
UPDATED : அக் 09, 2025 01:43 AM
ADDED : அக் 09, 2025 01:37 AM

மேட்டுப்பாளையம்:தமிழகத்தில், '20 கோடி ரூபாய் செலவில், 10 இடங்களில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்,'' என அமைச்சர் காந்தி பேசினார்.
![]() |
கோவை மாவட்டம், சிறுமுகையில் நடந்த சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேசியதாவது:
கைத்தறி பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும், 20 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் 10 இடங்களில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என, 2023 - 24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதை செயல்படுத்தும் வகையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில், சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
![]() |
முதல் கட்டமாக, 1.12 கோடி ரூபாய் செலவில் 50 கைத்தறிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 50 கைத்தறிகள் மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும். கைத்தறி ஆதரவு திட்டம், தொழில்நுட்ப மேம்பாட்டு இனத்தின் கீழ், 706 பயனாளிகளுக்கு, 78.12 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.
இதில், சிறுமுகையைச் சேர்ந்த 306 பயனாளிகளுக்கு, 55.02 லட்சம் ரூபாய் செலவில், 446 தறி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
1 மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், பட்டு சுடிதார், ஸ்டோல் ரகங்கள் என ஒரு ஆண்டிற்கு, 5 கோடி ரூபாய்க்கு துணி ரகங்கள் உற்பத்தி செய்ய இலக்கு
2 கைத்தறி நெசவாளர்களுக்கு நாளொன்றுக்கு 800 வீதம், ஒரு மாதத்தில் 20,000 ரூபாய் வரை கூலி ஈட்ட முடியும்
3 பூங்காவில் 50 கைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 90 நெசவு சார்ந்த தொழிலாளர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்