அக்டோபரில் முதல் முறையாக 10,000 மின்சார கார்கள் விற்பனை
அக்டோபரில் முதல் முறையாக 10,000 மின்சார கார்கள் விற்பனை
ADDED : நவ 03, 2024 02:45 AM

சென்னை:பண்டிகை மாதமான கடந்த அக்டோபரில், மின்சார கார் விற்பனை, 38 சதவீதம் உயர்ந்து, முதல் முறையாக, 10,000க்கும் அதிகமான கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக, தேசிய வாகனப் பதிவேடான, 'வாஹன்' தள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், 7,606 மின்சார கார்கள் விற்பனை ஆன நிலையில், இந்த அக்டோபரில், 10,534 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தை பங்கு
சொகுசு மின்சார கார்களின் விற்பனை, 39 சதவீதம் உயர்ந்து, 311 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மின்சார கார் சந்தையில், சொகுசு கார்களின் சந்தை பங்கு மூன்று சதவீதம் ஆகும்.
கடந்த இரு மாதங்களாக மின்சார கார் விற்பனை சரிவடைந்து வந்த நிலையில், பண்டிகை கால தள்ளுபடி, அதிக வாகன இருப்பு, சுலபமான நிதி வசதி ஆகியவை இதன் விற்பனைக்கு உந்துதலாக இருந்துள்ளது.
மின்சார கார் சந்தையில் முதல் இடத்தில் இருக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 9.53 சதவீதமாக உயர்ந்து, 6,125 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த அக்டோபரில், அதன் சந்தை மதிப்பு, 58 சதவீதமாக இருந்தாலும், ஆண்டு அடிப்படையில், 15 சதவீத சந்தை பங்கை இழந்துள்ளது.
வளர்ச்சிக்கு காரணம்
அதிகபட்சமாக, எம்.ஜி., மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 166 சதவீதம் உயர்ந்து, 2,509 கார்கள் விற்பனை செய்யப்பட்டுஉள்ளன.
வின்சர் இ.வி., காரின் அறிமுகம் மற்றும் பேட்டரி வாடகை திட்டம் ஆகியவை, இந்நிறுவன விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.