சென்னையில் ஆலை அமைக்கிறது அமெரிக்காவின் 'ராக்வெல்' நிறுவனம் 'ராக்வெல் ஆட்டோமேஷன்' தகவல்
சென்னையில் ஆலை அமைக்கிறது அமெரிக்காவின் 'ராக்வெல்' நிறுவனம் 'ராக்வெல் ஆட்டோமேஷன்' தகவல்
ADDED : டிச 10, 2024 10:58 PM

கலிபோர்னியா,:சென்னையில் அமைந்து வரும் 'ராக்வெல் ஆட்டோமேஷன்' நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில், முதற்கட்ட உற்பத்தி, அடுத்தாண்டு மே மாதம் முதல் துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக செயல்பாட்டுக்கு வர உள்ள இந்த ஆலையில், 230 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
முதற்கட்டத்தின் போது செமிகண்டக்டர் துறையில் கவனம் செலுத்தப்படும் என்றும்; இரண்டாம் கட்டத்தில் தரவு மையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
ராக்வெல் ஆட்டோமேஷன், அமெரிக்காவைச் சேர்ந்த 'இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன்' நிறுவனமாகும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருளில் இந்தியாவின் திறனை பயன்படுத்திக் கொண்டுள்ள ராக்வெல் நிறுவனம், அடுத்ததாக தயாரிப்பு, மென்பொருள் துறைகளில், இந்தியாவை தங்களது முக்கிய தயாரிப்பு மையமாக உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஆலை அமைத்து வருவதாகவும், அடுத்தாண்டு மே மாதம் முதல் அங்கு முதற்கட்ட உற்பத்தி துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அதன் பணியாளர் எண்ணிக்கையில் இந்தியாவே முன்னிலையில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 1,000ல் இருந்து 4,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது தயாரிப்பு வசதிகளுக்காக சீனாவை மட்டுமே சார்ந்திருக்காமல், பிற நாடுகளிலும் தயாரிப்பு மையங்களை அமைக்க முனைப்பு காட்டி வருகின்றன.
'சீனா பிளஸ் ஒன்' என அழைக்கப்படும் இத்திட்டத்தால், இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில், நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு ஆலைகளை நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.