தர்ப்பூசணி விதை இறக்குமதி தடை விதித்தது மத்திய அரசு
தர்ப்பூசணி விதை இறக்குமதி தடை விதித்தது மத்திய அரசு
ADDED : ஜூன் 26, 2025 01:20 AM

புதுடில்லி:உள்நாட்டு விதை உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக,வெளிநாடுகளில் இருந்து தர்ப்பூசணி விதைகள் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
இந்தியாவில் உ.பி., ஆந்திரா, மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் தர்ப்பூசணி பழங்கள் சாகுபடி நடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் குஜராத், ராஜஸ்தானில் தர்ப்பூசணி சாகுபடி நடைபெறுவது வழக்கம். நாட்டின் தர்ப்பூசணி விதைகள் தேவை ஆண்டுக்கு கிட்டத்தட்ட 60,000- -- 65,000 டன்னாக உள்ளன.
உள்நாட்டில் 40,000 டன்னுக்கு குறைவாக விதைகள் உற்பத்தி செய்யப்படுவதால், 20,000 - - 25,000 டன் விதைகளுக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் சூழல் நிலவுகிறது. தர்ப்பூசணி விதைகளை, உரிமம் வைத்திருப்போர் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் வரை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்களின் கூட்டமைப்பான லகு உத்யோக் பாரதியின் கோரிக்கையை ஏற்று, சிறு, குறு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், தர்ப்பூசணி விதைகள் இறக்குமதி மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.