சிறு விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடியில் மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம்
சிறு விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடியில் மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம்
ADDED : டிச 18, 2024 02:01 AM

புதுடில்லி:சிறு விவசாயிகளுக்கு, வங்கிகள் தயக்கமின்றி கடன் வழங்க வசதியாக 1,000 கோடி ரூபாயில் கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
டில்லியில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இதன்படி, அறுவடைக்குப் பின் தானியங்களை இருப்பு வைத்ததற்கான கிடங்கின் மின்னணு ரசீதை வைத்துள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகள், அந்த ரசீதைக் காட்டினால், கடன் பெற அனுமதிக்கப்படுவர்.
விவசாயக் கடன் திட்டங்களில் இத்திட்டம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும்; விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் காட்டும் தயக்கத்தை குறைக்கும் என்றும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
அறுவடை செய்யும் சிறு விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காத சூழல் இருந்தாலும், அடுத்த போகம் பயிரிட வேண்டியிருப்பதால், நஷ்டத்தில் தங்கள் விளைபொருளை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இத்திட்டத்தின்கீழ், தங்கள் விளைபொருளை கிடங்குகளில் இருப்பு வைத்து, அதற்கான ரசீதைக் காட்டினால், அடுத்த போகம் பயிரிட, அவர்கள் கடன் பெற முடியும்.
தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும்போது, கிடங்கில் உள்ள அவற்றை விற்பனை செய்து, நஷ்டத்தை தவிர்க்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. கிடங்கு ரசீதை வங்கிகள் பிணையாகக் கருதி, விவசாயிகளுக்கு தயக்கமின்றி கடன் வழங்க, முன்வர இந்த திட்டம் உதவும்.
அதற்காக, வங்கிகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதியில் இருந்து கடன் உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்கும்.