ADDED : ஜூலை 04, 2026 07:14 AM

லக்சம்பர்கில் பேடிஎம் ஐரோப்பா
பின்டெக் நிறுவனமான ஒன் நைன்டிசெவென் கம்யூனிகேசனின் துணை நிறுவனமான பேடிஎம்., பேடிஎம் ஈரோப் பண்ட்ஸ், லக்சம்பர்க் நிதி கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து பண பரிவர்த்தனை நிறுவன உரிமத்தை பெற்றுள்ளது. ஜூலை 2 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உரிமம், ஐரோப்பிய சந்தையில் டிஜிட்டல் கட்டண சேவைகளை விரிவுபடுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஆந்திராவில் ரூ.16,350 கோடி ஜே.எஸ்.டபிள்யு., முதலீடு
ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் 16,350 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த ஸ்டீல் திட்டத்தை ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் நிறுவனம் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் டன்னும் இரண்டாம் கட்டமாக 11,850 கோடி ரூபாய் முதலீட்டில் 20 லட்சம் டன்னும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
3 ஆண்டுகளில் ரூ.40,000 கோடி எம்.இ.ஐ.எல்., முதலீடு
உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ப்ராஸ்ட்ரெக்சர்ஸ் லிமிடெட், அடுத்த 3 ஆண்டுகளில் மூலதன செலவினங்களுக்காக 40,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய், 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், எண்ணெய், எரிவாயு, போக்குவரத்து, பாதுகாப்பு, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முக்கிய நிறுவனமாக உள்ளது.
கோலா குளிர்பான வணிகத்தில் ஐ.டி.சி.,
ஐ.டி.சி., நிறுவனம் இளநீரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் கார்பனேட்டட் பானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கோலா குளிர்பான சந்தையில் புதிய போட்டியை இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டின் குளிர்பான சந்தையில் சுமார் 90 சதவீத பங்கை அமெரிக்க நிறுவனங்களான கோக கோலா, பெப்சி ஆகியவை கட்டுப் படுத்தி வரும் நிலையில், ரிலையன்சின் கேம்பாவை அடுத்து ஐ.டி.சி.,யும் களமிறங்குகிறது.
பணியாற்ற சிறந்த 5 நிறுவனங்கள் பட்டியல்
இந்தியாவில் ஊழியர்கள் பணியாற்ற சிறந்த நிறுவனங்களுக்கான 2026ம் ஆண்டுக்கான தரவரிசையில், முதல் 5 இடங்களை முறையே ஹில்டன், சிஸ்கோ, சின்க்ரோனி, இன்டர்கான்டினென்டல் ஹோட்டல்ஸ் குரூப், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. பணியிட கலாசாரம், ஊழியர் நலன் தொடர்பான கிரேட் ப்ளேஸ் டு வொர்க் இந்தியா அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
