உணவு பதப்படுத்தும் தொழில்கள் எம்.எஸ்.எம்.இ., பயன்பெற அழைப்பு
உணவு பதப்படுத்தும் தொழில்கள் எம்.எஸ்.எம்.இ., பயன்பெற அழைப்பு
ADDED : அக் 13, 2025 11:01 PM

கோவை :உணவு பதப்படுத்தும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பிராண்டிங், சந்தைப்படுத்துதல், பேக்கேஜிங் உள்ளிட்டவை சார்ந்து வழங்கப்படும் வழிகாட்டலில் பங்கேற்க, 'டி.என்.அபெக்ஸ்' அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசின், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம், உலக வங்கி நிதியுதவியுடன், 'எம்.எஸ்.எம்.இ., செயல்பாடுகளை உயர்த்தும் மற்றும் விரைவுபடுத்தும்' திட்டமான, 'ரேம்ப்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி கழகம்- - அபெக்ஸ், மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.ஐ.எம்.ஆர்., உடன் இணைந்து, உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ், வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
இதன்படி, உணவு பதப்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பிராண்டிங், பேக்கேஜிங், சந்தைப்படுத்துதல், புதிய பொருட்களை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கொண்ட, உணவு பதப்படுத்தல் துறையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உத்யம் தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியம். நிதி உதவி ஏதும் இத்திட்டத்தில் வழங்கப்படாது; வழிகாட்டல்கள் மட்டுமே வழங்கப்படும்.
வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 95664 66471, 95002 61727 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.