வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரி ஏப்., 1 முதல் நீக்கப்படுமென அரசு அறிவிப்பு
வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரி ஏப்., 1 முதல் நீக்கப்படுமென அரசு அறிவிப்பு
ADDED : மார் 23, 2025 09:28 PM

புதுடில்லி:விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பை திரும்ப பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி குறைவு மற்றும் விலை அதிகரிப்பால், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதியன்று வெங்காய ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரியை மத்திய அரசு விதித்தது.
தற்போது ராபி பருவ பயிர்கள் வரவு அதிகரித்திருப்பதையடுத்து, வெங்காயத்தின் விலைகள் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்திய அளவில் சராசரி சில்லரை விலை 10 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன.
இதையடுத்து, வெங்காய விலையை சீராக வைத்திருக்கவும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் வருகிற 1ம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 20 சதவீத வரியை திரும்ப பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாக கடந்த 1.5 ஆண்டுகளுக்கு பின், வெங்காய ஏற்றுமதிக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது.
ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் மொத்த வெங்காய ஏற்றுமதி 17.17 லட்சம் டன்களாகவும், நடப்பு 2024 - 25ம் நிதியாண்டின் மார்ச் 18ம் தேதி வரை 11.65 லட்சம் டன்களாவும் இருந்தது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.