வரலாறு படைத்த வாகன விற்பனை நவராத்திரியில் 34 சதவீதம் உயர்வு
வரலாறு படைத்த வாகன விற்பனை நவராத்திரியில் 34 சதவீதம் உயர்வு
ADDED : அக் 08, 2025 12:58 AM

சென்னை:செப்டம்பர் மாத வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் விற்பனை அறிக்கையை வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த மாத வாகன விற்பனை, 5.22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 17.36 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் 18.27 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நவராத்திரி காலத்தில் வாகன விற்பனை 34 சதவீதம் உயர்ந்து, வரலாறு காணாத அளவில் 11.56 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சாய் கிரிதர் கூறியதாவது:
செப்டம்பர் முதல் மூன்று வாரத்தில், வாகன விற்பனை மந்தமாக இருந்தது. ஜி.எஸ்.டி., 2.0 அமலுக்காக, வாகன முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் தாமதித்தனர்.
புதிய ஜி.எஸ்.டி., அமலான அதே நாளில், நவராத்திரி பண்டிகையும் துவங்கியதால், கடைசி ஒரு வாரத்தில் விற்பனை எகிறியது.
வரும் 42 நாட்கள் பண்டிகை காலத்திற்காக, வாகன இருப்புகளை டீலர்கள் அதிகப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.