ADDED : நவ 29, 2024 11:16 PM

மும்பை:கடந்த செப்டம்பர் காலாண்டில், இந்தியாவின் வீட்டு விலைக் குறியீடு 4.30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை, பெங்களூரு, டில்லி உள்பட 10 முக்கிய நகரங்களில் நடைபெறும் பரிவர்த்தனை தரவுகள் அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கி, வீட்டு விலைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வீட்டு விலைக் குறியீடு 3.30 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.
இதுவே, கடந்த ஆண்டு, செப்டம்பர் காலாண்டில், 3.50 சதவீதமாக வளர்ச்சி பதிவாகி இருந்தது. நடப்பு நிதியாண்டுக்கான வீட்டு விலைக் குறியீடு, பல்வேறு நகரங்களில் மாறுப்பட்டு காணப்படுகிறது.
அதிகபட்சமாக, பெங்களூரில் 8.80 சதவீதமும், கான்பூரில் குறைந்தபட்சமாக 2 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
முந்தைய ஆண்டு, இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை - செப்டம்பர் காலத்தில், இந்தியாவின் வீட்டு விலைக் குறியீடு 0.10 சதவீதம் குறைந்து உள்ளது. எனினும், சென்னை, அகமதாபாத், லக்னோ, கோல்கட்டா ஆகிய நகரங்களில், வீடுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.