கொப்பரை விலை சரிவு சிண்டிகேட் காரணமா? தென்னை விவசாயிகள் அதிர்ச்சி
கொப்பரை விலை சரிவு சிண்டிகேட் காரணமா? தென்னை விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : டிச 11, 2025 01:21 AM

உடுமலை: 'தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்துள்ள நிலையில், விலை குறைவுக்கு வியாபாரிகள் 'சிண்டிகேட்' காரணமாக கொப்பரை விலை செயற்கையாக குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், கடந்த ஓராண்டாக, தென்னை மரங்களில் வாடல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளால், சராசரி உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.
இதனால், கொப்பரை உற்பத்திக்கான தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தாண்டு ஜூன் மாதத்தில், கிலோ, 235 முதல் 250 ரூபாய் என விலை உச்சம் தொட்டது. தேங்காய் விலையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனால் இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு பலனளிக்கவில்லை.
கடந்த சில வாரங்களாக கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து கிலோ 185 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில செயலர் மவுனகுருசாமி கூறுகையில், ''தேங்காய் மற்றும் கொப்பரை வர்த்தகத்தில், வியாபாரிகள் 'சிண்டிகேட்' காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காய் உற்பத்தி இல்லாமல், தேவை, தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, விலை வீழ்ச்சி ஏற்படுவது மர்மமாக உள்ளது.
தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கலப்படம் அதிகரித்துள்ளதால், உற்பத்திக்கு தேவையான கொப்பரை கொள்மு தலை குறைத்து, விலை சரிவை ஏற்படுத்துகின்றனர். இது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
4.42 லட்சம் ஹெக்டேர்
தமிழக தென்னை சாகுபடி பரப்பு
543 கோடி
தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி
12,282
தேங்காய் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு
(ஆண்டு சராசரி நிலவரம்)

