தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி நான்கு மாதங்களில் இல்லாத சரிவு
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி நான்கு மாதங்களில் இல்லாத சரிவு
ADDED : அக் 02, 2025 12:20 AM

புதுடில்லி : புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி குறைவின் காரணமாக, நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த செப்டம்பர் மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத சரிவு கண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளைத் திரட்டி வருகிறது.
செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 57.70 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆகஸ்டில் 59.30 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவை குறிக்கும்.
ஒட்டுமொத்தமாக புதிய ஆர்டர்கள், உற்பத்தி மற்றும் உள்ளீட்டு பொருட்கள் வாங்குவது சற்று குறைந்துள்ளபோதிலும், ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளது.
இது, அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை காட்டுகிறது. கடந்த மாதம் உள்ளீட்டு பொருட்களின் விலை மற்றும் விற்பனை விலை ஆகிய இரண்டுமே
அதிகரித்துள்ளன.பணியாளர் செலவு, மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதாக நிறுவனங்கள்
தெரிவித்தன.பணியமர்த்தல்களை பொறுத்தவரை சிறிய முன்னேற்றமே காணப்பட்டது. எதிர்கால வணிக சூழல் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டதால், தேவை அதிகரிக்கும் என நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.