ADDED : ஏப் 23, 2025 05:58 AM

செங்கல்பட்டு ; பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ரெனோ, செங்கல்பட்டு மாவட்டத்தின் மஹிந்திரா சிட்டி பகுதியில், புதிய கார் வடிவமைப்பு மையத்தை துவக்கி உள்ளது.
இது, பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய வடிவமைப்பு மையம் ஆகும். இந்த வடிவமைப்பு மையம், 1,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, நவீன மென்பொருள் மற்றும் டிஜிட்டல் கருவிகள், கார் வடிவமைப்பை மேம்படுத்த 3-டி மாடலிங் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
இதுகுறித்து ரெனோ இந்தியா தலைமை செயல் அதிகாரி வெங்கட்ராமன் பேசியதாவது:
இந்திய கார் சந்தையில், நாங்கள் 1 சதவீதத்திற்கும் குறைவான பங்கை வைத்துள்ளோம். புதிய அறிமுகங்கள் வாயிலாக, 3ல் இருந்து 5 சதவீத சந்தை பங்கை கைப்பற்ற இலக்கு வைத்துள்ளோம்.
இந்திய சந்தையில், 54 சதவீதத்திற்கு அதிகமாக எஸ்.யூ.வி., கார்களே விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த இரு ஆண்டுகளில் அறிமுகமாக உள்ள 5 புதிய எஸ்.யூ.வி., கார்களில், இரு கார்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.