பி.எப்., பணத்தை ஏ.டி.எம்.,மில் எடுக்கலாம் புதிய சலுகைகளுடன் வருகிறது பி.எப்., 3.0
பி.எப்., பணத்தை ஏ.டி.எம்.,மில் எடுக்கலாம் புதிய சலுகைகளுடன் வருகிறது பி.எப்., 3.0
ADDED : நவ 29, 2024 10:54 PM

புதுடில்லி:வருங்கால வைப்பு நிதியான பி.எப்., கணக்கில் இருந்து பணத்தை, ஏ.டி.எம்., வாயிலாக எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த இ.பி.எப்.ஓ., திட்டமிட்டுள்ளது.
வருமான வரித் துறையின் சார்பில், 'பான் 2.0' என்ற பெயரில் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கான மின்னணு வசதிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது போலவே, 'பி.எப்., 3.0' என்ற பெயரில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாத ஊதியத்தில் தொழிலாளர் மற்றும் நிர்வாகம் சரிசமமாக 12 சதவீதத்தை தற்போது பி.எப்., கணக்கில் செலுத்தி வரும் நிலையில், தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கான உச்ச வரம்பை மட்டும் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, பாதுகாப்பான அதேநேரம் நிதிச் சந்தையில் நியாயமான வட்டி கிடைக்கக்கூடிய பி.எப்., தொகையை, தொழிலாளர் விரும்பினால் கூடுதலாகவும் சேமிக்க இது வழி செய்யும்.
தொழிலாளர் 12 சதவீதத்துக்கு கூடுதலான தொகையை பி.எப்., கணக்கில் சேமித்தாலும், நிர்வாகம் தரப்பில் 12 சதவீதம் செலுத்த வேண்டிய விதிமுறையில் மாற்றம் இருக்காது.
மேலும், பி.எப்., கணக்குக்கு, 'டெபிட் கார்டு' போல அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பி.எப்., பணத்தில் ஒரு பகுதியை திரும்ப பெற விண்ணப்பித்து, ஒப்புதல் கிடைத்ததும், ஏ.டி.எம்.,மில் தொகையை தேவைக்கேற்ப சந்தாதாரர் எடுத்துக்கொள்ள இது வழி செய்கிறது.
அடுத்த ஆண்டு மே அல்லது ஜூனில் இந்த வசதி அறிமுகமாகும் என தெரிகிறது.