மறுசுழற்சி கட்டணத்துக்கு எதிராக அரசு மீது சாம்சங், எல்.ஜி., வழக்கு
மறுசுழற்சி கட்டணத்துக்கு எதிராக அரசு மீது சாம்சங், எல்.ஜி., வழக்கு
ADDED : ஏப் 23, 2025 05:57 AM

புதுடில்லி : ஏசி, பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்னணு பொருட்களின் மறுசுழற்சிக்கு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில் சாம்சங், எல்.ஜி., நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன.
கடந்தாண்டு செப்டம்பரில், வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் மறுசுழற்சிக்கு, கிலோவுக்கு 22 ரூபாயும், மொபைல் போனுக்கு கிலோவுக்கு 34 ரூபாயும் கட்டணமாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்தது.
இதற்கு போர்க்கொடி துாக்கி உள்ள ஹிட்டாச்சி, டைகின், ஹேவல்ஸ், வோல்டாஸ் ஆகிய நிறுவனங்கள், ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தன.
இந்நிலையில், நேற்று தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட சாம்சங், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள், தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், அரசின் புதிய கொள்கை, தங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை அளித்துள்ளதாகவும்; இந்தியாவின் மின்னணு கழிவுப்பொருட்கள் மேலாண்மை துறையில் உள்ள அடிப்படை பிரச்னையை சமாளிக்க தவறிவிட்டது எனவும், குற்றம்சாட்டி உள்ளன.
உலகளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக, மின்னணு பொருட்கள் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, கடந்தாண்டு 43 சதவீத மின்னணு கழிவுப்பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.
ஆலோசனை நிறுவனமான 'ரெட்சீர்' அறிக்கையின்படி, நாட்டின் மின்னணு பொருட்கள் மறுசுழற்சி விகிதம், சர்வதேச நாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. நம்மை விட, அமெரிக்கா ஐந்து மடங்கும், சீனா ஒன்றரை மடங்கும் அதிகமாக மறுசுழற்சி செய்து வருகின்றன.