ADDED : பிப் 05, 2025 11:30 PM

புதுடில்லி,:கடந்த ஜனவரி மாதத்தில், சேவைகள் துறை வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.
எச்.எஸ்.பி.சி., வங்கி, சேவைகள் துறையைச் சேர்ந்த 400 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை, எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா எனும் நிறுவனம் திரட்டுகிறது.
ஜனவரி மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதத்தில் 59.30 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 56.50 புள்ளிகளாக சரிந்துள்ளது. இதுவே கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைவான வளர்ச்சியாகும். இதற்கும் முன்பு கடந்த 2022 நவம்பரில் 56.40 என்பதே குறைவாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.
புதிய வணிக ஆர்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதிலும், அதன் வேகம் குறைந்துள்ளது. போட்டித்தன்மை அதிகரித்துள்ளதால், வளர்ச்சி குறைந்துள்ளது. எனினும், பிற நாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த விலையில் சேவைகளை வழங்கியதால், தேவை சற்றே குறைந்திருந்தாலும் தொடர்ந்து வலுவாகவே உள்ளது.
உலகளாவிய தேவை அதிகரித்தே காணப்பட்டது. நிறுவனங்களில் பணியமர்த்தல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மாதம் அதிகரித்தது. பணியாளர் ஊதியம், உணவு விலை ஆகியவற்றின் அதிகரிப்பால், நிறுவனங்களின் செலவு அதிகரித்துள்ளது. இதனால் அவை வழங்கும் சேவைகளின் விலையும் கடந்த மாதம் அதிகரித்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.