ADDED : செப் 19, 2026 07:04 AM

-சிறப்பு நிருபர்-
'இந்தியா செமிகண்டக்டர் துறையில் முன்னேற, திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழக இயக்குநர் ஜெனரல் சுந்தர் மனோகரன் தெரிவித்துள்ளார். அவர் நமது நாளிதழுக்கு அளித்த மினி பேட்டி:
செமிகண்டக்டர் துறையில் திறன் பெற்ற
பணியாளர்களுக்கான தேவை எவ்வளவு உள்ளது?
மேற்கண்ட துறைகளில், பல்வேறு கட்டங்களாக திறன் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் திறன் பெற்ற பணியாளர்கள் தேவை. நாட்டில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட, 6 லட்சம் மின்னணு பொறியியல் பட்டதாரிகள் உருவானாலும், செமிகண்டக்டர் துறைக்கு தயாரானவர்கள் குறைவாகவே உள்ளனர்.
இந்த தேவையை பி.டி.இ.யு., எவ்வாறு பூர்த்தி செய்கிறது?
குஜராத் செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ், அமெரிக்காவை சேர்ந்த 'மைக்ரான்' நிறுவனத்துடன் இணைந்து செமிகண்டக்டர் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 'மைக்ரான்' உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. துாய்மையான உற்பத்தி அறை, உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் உங்கள் இலக்கு?
அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தது 3,000 திறன் பெற்ற பணியாளர்களை உருவாக்குவதே இலக்கு.
உயர் தொழில்நுட்ப துறைகளுக்கான திறன் பயிற்சியை விரிவுபடுத்துவது எப்படி ?
பாடத்திட்ட மேம்பாட்டில் தற்போதுள்ள நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். கல்வியில் 60 சதவீதம் திறன் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப உட்கட்டமைப்பையும் மாற்ற வேண்டும். தொழில்துறையின் பங்களிப்பு அவசியம். தொழில்துறையின் ஆதரவு இல்லாமல் தேவையான பயிற்சியை வழங்க முடியாது.
