இந்தியா - சீனா உறவில் முன்னேற்றம் அழுத்தம் கொடுத்த தொழில்துறையினர் மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு மாற்றம் தருமா?
இந்தியா - சீனா உறவில் முன்னேற்றம் அழுத்தம் கொடுத்த தொழில்துறையினர் மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு மாற்றம் தருமா?
ADDED : அக் 24, 2024 11:48 PM

புதுடில்லி:சீனப் பொருட்கள் இறக்குமதி, முக்கிய துறைகளில் முதலீடு ஆகியவற்றை அனுமதிக்க, இந்தியா கடைப்பிடிக்கும் தீவிர கட்டுப்பாடுகள், ஷி ஜின்பிங், மோடி சந்திப்புக்குப் பின் விலக்கிக் கொள்ளப்படலாம் என, தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ல், லடாக் எல்லையின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் கடுமையாக சண்டையிட்டதில், இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் எண்ணிக்கை தெரியாத அளவில் பலரும் உயிரிழந்தனர்.
தொழில்துறை அழுத்தம்
அப்போது முதல், சீனப் பொருட்கள் இறக்குமதி மற்றும் இந்தியாவில் அந்நாட்டின் முதலீடுகளை அனுமதிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடைப்பிடித்து வருகிறது. நுாற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது; விசா ஒப்புதல்களும் தாமதப்படுத்தப்பட்டன.
இதனால், உலகின் மிக முக்கிய சந்தையான இந்தியாவில், தன் பொருட்கள் மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதில் சீனா சிரமத்தை சந்தித்தது. இது, சீனாவுக்கு மட்டுமின்றி இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக, முன்னணி தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் தெரிவித்து வந்ததாக டில்லியில், உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சீனா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு இந்த ஆண்டு துவக்கம் முதல் அழுத்தம் கொடுத்தனர்.
இந்தியாவில் சீனாவின் முதலீடு மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால், செமிகண்டக்டர், மின்சார வாகன உதிரிபாகங்கள், பேட்டரிகள் உள்ளிட்ட அவசியமான பொருட்கள் உற்பத்தியில் முதலீடு பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த சூழலில், ரஷ்யாவில் நடைபெற்ற 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இருநாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கு தீர்வுகாண, ஒத்துழைப்பை வலிமைப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
குழு அமைக்கப்படும்
இதன்படி, இந்தியா - சீனா தரப்பில் சிறப்பு பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து, அவ்வப்போது சந்தித்து பேசுவது என திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சாதகமான சூழலால், சீன நிறுவனமான பி.ஒய்.டி.,யின் கிட்டத்தட்ட 8,400 கோடி ரூபாய் முதலீட்டிலான மின்சார வாகன திட்டம் வேகம் பெறக்கூடும் எனத் தெரிகிறது.
எனினும், உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்க தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அன்னிய நேரடி முதலீடு தேவை என்பதற்காக கண்மூடித்தனமாக எதையும் அனுமதிக்க முடியாது என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
'செமிகண்டக்டர், மின்சார வாகன உதிரிபாகங்கள், பேட்டரிகள் உற்பத்தியில் முதலீடுகள் பாதிக்கப்படுவதால், சீனா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுத்தனர்'

