குழந்தைகளுக்கான மியூச்சுவல் பண்டு; அதிக வருவாய் தருவதால் ஆர்வம்
குழந்தைகளுக்கான மியூச்சுவல் பண்டு; அதிக வருவாய் தருவதால் ஆர்வம்
UPDATED : டிச 16, 2025 11:25 AM
ADDED : டிச 16, 2025 05:52 AM

குழந்தைகளுக்கான மியூச்சுவல் பண்டு திட்டங்கள் ஐந்து ஆண்டுகளில் 160 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பது, ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்து உள்ளது.
கடந்த 2020- 2025ம் ஆண்டு வரை இந்த வகை திட்டங்களின் சொத்து மதிப்பு 9,866 கோடி ரூபாயிலிருந்து 25,675 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கான மியூச்சுவல் பண்டு திட்டங்களின் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 15-20 சதவீதம் வரை வருவாயை வழங்கியுள்ளன. சிறப்பாக செயல்படும் சில திட்டங்கள் ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்டு கூட்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதிகரிக்க காரணம்
* பணவீக்கத்தை விடவும் கல்விக் கட்டணம் உயர்வாக இருப்பது.
* பிக்சட் டிபாசிட் திட்டங்களின் வருவாயில் கல்வி கட்டண செலவுகளை ஈடுகட்ட முடிவதில்லை.
* அதிக வருமானம் தரும் பங்குச் சந்தையுடன் இணைந்த முதலீட்டு திட்டத்தில் பெற்றோர் ஆர்வம்.
* 5 ஆண்டுகள் அல்லது குழந்தைக்கு 18 வயதாகும் வரை பணத்தை எடுக்க முடியாது. அதாவது, கட்டாய லாக்-இன் வசதி இருப்பது.
* நீண்டகால சேமிப்பிற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுவதால், பெற்றோர் அதிகம் விரும்புவது.
அபாயங்கள்
* பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருவாய் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.
* குழந்தைகளின் கல்விக்கான இலக்கு நெருங்கும் நேரத்தில், சந்தை வீழ்ச்சியடைந்தால், வருவாய் குறைய வாய்ப்பு.
* நிதி மேலாளர் சரியான விகிதத்தில் பங்கு, கடன் திட்டங்களில் முதலீட்டை செய்ய தவறினால், அது வருமானத்தை பாதிக்கலாம்.
* உயர்ந்து வரும் கல்வி செலவைவிட, குறைவான வருமானத்தை அந்த பண்டு கொடுத்தால், தேவையான நிதியை சமாளிக்க நேரிடும்.
* லாக்-இன் காலம் இருப்பதால், அவரச தேவைக்கு பணத்தை எடுக்க முடியாது.

