கால் பார்வேடிங் வசதியில் புது மோசடி: எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்
கால் பார்வேடிங் வசதியில் புது மோசடி: எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்
ADDED : ஜன 08, 2026 02:29 AM

வழக்கமான அழைப்பு அல்லது டெலிவரி தொடர்பான அப்டேட்டில் கூட, தற்போது கால் பார்வேடிங் வசதியை தவறாக பயன்படுத்தி, சில மோசடியாளர்கள் அழைப்புகள் அல்லது முக்கியமான குறுஞ்செய்திகள், வங்கி ஓ.டி.பி., போன்றவற்றை, தங்கள் சொந்த மொபைல் எண்ணுக்கு அனுப்பி, புது வகையான மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:
மோசடியாளர்கள், டெலிவரி அல்லது கூரியர் சேவை முகவர்களாக தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, டெலிவரியை உறுதி செய்ய அல்லது மாற்றுவதற்கு, 21 என்ற எண்ணில் துவங்கும் யு.எஸ்.எஸ்.டி., கோடுகளை மொபைல் போனில் டயல் செய்ய கூறுகின்றனர்.
அதனை செய்தவுடன், உங்கள் அழைப்புகள் தானாகவே, மோசடியாளர் எண்ணுக்கு திசை திருப்பப்படும். இதனால், வங்கிகளிடம் இருந்து வரும் சரிபார்ப்பு அழைப்புகள் மற்றும் செயலிகள் அனுப்பும் குறுஞ்செய்தி ஆகியவை மோசடியாளர்கள் கைக்கு முன்னரே சென்றுவிடுகிறது.
எனவே, எஸ்.எம்.எஸ், வாட்ஸாப் அல்லது இமெயில் வாயிலாக சந்தேகத்துக்குரிய டெலிவரி அல்லது கூரியர் இணைப்புகள் பெற்றால், அதனை 'கிளிக்' செய்வதை தவிர்க்க வேண்டும். மோசடியால் பாதிக்கப்பட்டால், 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற முகவரியில், உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

