ADDED : ஆக 02, 2026 02:27 AM

சென்னை: தமிழக அரசு தொழில் முதலீட்டை ஈர்க்க புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளது. அதில் இடம்பெற வேண்டியவை குறித்து தன், 'லிங்க்ட்இன்' தளத்தில் கருத்து தெரிவிக்க தொழில்முனைவோர், முதலீட்டாளர்களுக்கு, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
தமிழகத்திலும், வெளியிலும் உள்ள தொழில்துறை தலைவர்கள், தொழில் அமைப்புகள், பல நாடுகளின் துாதரக பிரதிநிதிகளை சந்தித்து, அரசு இன்னும் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை பற்றி கருத்து கேட்டறியப்பட்டது.
'இன்ஸ்டாகிராம், எக்ஸ்' தளங்கள் தகவலை பகிர்வதற்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அடுத்த தொழில் கொள்கையை உருவாக்குவதற்காக 'லிங்க்ட்இன்' தளம் கருத்து பரிமாற்றத்திற்கான அரங்கமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
தொழில்முனைவோர், முதலீட்டாளர், நிறுவனர், மாணவர், கல்வியாளர் அல்லது தமிழகத்தின் எதிர்காலத்தில் அக்கறை உடையவர் யாராக இருந்தாலும், உங்களின் கருத்துக்களை கேட்க விரும்புகிறேன். சரியாக செய்து வரும் விஷயங்களை சொல்லுங்கள். தவறாக செய்து வரும் விஷயங்களையும் தயக்கமின்றி கூறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கீர்த்தனா
