தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்: பரம்பரை சொத்து வரி என்றால் என்ன?

ஆயிரம் சந்தேகங்கள்: பரம்பரை சொத்து வரி என்றால் என்ன?

ஆயிரம் சந்தேகங்கள்: பரம்பரை சொத்து வரி என்றால் என்ன?


ADDED : ஏப் 29, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வீட்டில் மூன்று போர்ஷன்களை வாடகைக்கு விட்டிருக்கிறேன். இந்த வாடகையின் மீது நான் கடன் பெற முடியுமா?

எஸ்.எல்.வாசுதேவன், கொண்டியம்பதி, சென்னை.


பொதுவாக பெரிய கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ்கள், வங்கிக் கிளைகள், பெரிய குடோன்கள் போன்றவை ஈட்டித் தரும் வாடகையின் மீது கடன் கொடுக்க வங்கிகளில் வசதி உண்டு. ஒருசில வங்கிகள், குடியிருப்புகளில் இருந்து வரும் வாடகையின் பேரிலும் கடன் கொடுக்கின்றன.

முறையான வாடகை ஒப்பந்தம் இருக்கவேண்டும், வாடகை பெற்றதற்கான ரசீது கொடுக்கப்பட வேண்டும். வாடகைக்கு எடுப்பவை பெரிய நிறுவனங்களாகவோ, வங்கிகளாகவோ இருக்க வேண்டும், வாடகை நிரந்தரமாகவும் ஒழுங்காகவும் வரும் என்பதற்கான உத்தரவாதம் இது.

இப்படிப்பட்ட கட்டடங்களின் உறுதித் தன்மை, அதன் வாடகை ஈட்டும் தன்மை குறித்த மதிப்பீடு ஆகியவை செய்யப்பட்டு, வாடகை மீதான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. குடியிருப்பு வீடுகளுக்கும் இதே விதிகள் பொருந்தும் என்றாலும், அங்கே சற்றே தயக்கம் இருக்கும். குடியிருப்பவர்கள் ஒழுங்காக வாடகை கொடுப்பார்கள், நிரந்தரமாக இருப்பார்கள் என்பது மாதிரியான உறுதி இருக்காது அல்லவா?

மியூச்சுவல் பண்டுகளில், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வதை விட, நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது தான் லாபம் என்கின்றனரே?

ஜி.ஆர்.சாந்தி, குரோம்பேட்டை, சென்னை.


நேரடி பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் அதிகம் தான். ஆனால், அதற்கு நீங்களே பாதி ராக்கெட் விஞ்ஞானியாக ஆகியிருக்க வேண்டும். எந்தத் துறை வளர்கிறது? அதில் எந்தப் பங்குகள் லாபம் ஈட்டும்? தொடர்ச்சியாக லாபம் ஈட்டுமா? கடன் உண்டா? வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? எத்தனை ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்படும்? ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால், எத்தனை ஆண்டுகளில் மீண்டெழ முடியும்? அல்லது நஷ்டத்தில் பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறிவிட முடியுமா? இதுபோன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை தேடும் பொறுமை தேவை.

மேலும், கால அவகாசமும் சதா சர்வகாலமும் 'பங்கு' ஜெபம் மட்டுமே செய்யக்கூடிய மனப்போக்கும் உங்களுக்கு உண்டென்றால், நீங்கள் நேரடி பங்கு முதலீட்டில் ஈடுபடலாம்.

இதெல்லாம் முடியாது, ஆனால், இந்திய வளர்ச்சியின் பயனை மட்டும் ஓரளவுக்கு பெறவேண்டும் என்று கருதுபவர்களுக்கு உதவுபவை தான் மியூச்சுவல் பண்டு திட்டங்கள்.

ஓய்வூதிய பலனை வங்கிகளில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா? இன்னும் வட்டி விகிதம் உயருமா?

கே.எம்.கிருஷ்ணன், கோவை.


இனிமேல் வங்கிகளின் வட்டி விகிதங்கள் உயர்வதற்கு வாய்ப்பில்லை. வரும் செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி 'ரெப்போ' விகிதத்தைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதாவது, இப்போது வைப்பு நிதித் திட்டங்களுக்கு கிடைத்து வரும் வட்டி விகிதம், இனிமேல் குறையக் கூடும்.

முடிந்தவரை, உங்கள் ஓய்வூதிய பலனை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யுங்கள். அஞ்சலகங்கள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள், கொஞ்சம் மியூச்சுவல் பண்டுகள் என்று போட்டு வையுங்கள். வரி பிடித்தம் போக, 10 சதவீத வருவாயேனும் ஈட்டும் விதமாக முதலீட்டைத் திட்டமிடுங்கள்.

பரம்பரை சொத்தின் மீதான வரி என்றால் என்ன? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

வி.ஈஸ்வரன் பிரதீப், திருப்பூர்.


அமெரிக்காவின் ஆறு மாகாணங்களிலும், வேறு சில நாடுகளிலும் பரம்பரை சொத்தின் மீதான வரி எனப்படும், 'இன்ஹெரிடன்ஸ் டாக்ஸ்' இருக்கிறது. அதாவது, ஒருவர் மறைந்துபோனால், அவரது சொத்துக்களில் 45 சதவீதம் வாரிசுகளுக்குப் போய்ச்சேரும்.

மீதமுதள்ள 55 சதவீதம் அரசுக்குப் போய்ச் சேரும். உலகிலேயே அதிகபட்ச பரம்பரை சொத்து வரி இருக்கும் நாடுகளில் ஒன்று பெல்ஜியம், அங்கே 80 சதவீதம் வரை அரசுக்கு வரி போய்ச் சேரும். தென் கொரியாவில் 50 சதவீதம், ஜப்பானில் 10 முதல் 70 சதவீதம், பிரான்ஸில் 5 முதல் 60 சதவீதம், ஸ்பெயினில் 7.65 முதல் 34 சதவீதம் என்று விதம் விதமாக பரம்பரை சொத்துக்களின் மீதான வரி வசூல் செய்யப்படுகிறது.

ஆனால், இதிலும் ஏராளமான உப விதிகள் உண்டு. எல்லோரும் பரம்பரை சொத்து வரி செலுத்தத் தேவையில்லை.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் பொருளீட்டியவர்கள், தற்போதைய பணவீக்கம் உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டே, இத்தகைய வரி விதிக்கப்படுகின்றன. இந்தியாவிலும் முன்பு எஸ்டேட் டியூட்டி வரி, செல்வ வரி, பரிசு மீதான வரி ஆகியவை இருந்துள்ளன. பின்னர் அவை விலக்கப்பட்டன. மீண்டும் இந்தியாவில் இத்தகைய வரி ஏதும் வராது. அதைக் கொண்டுவரும் துணிச்சல் எந்தக் கட்சிக்கும் இல்லை.

கல்விக் கட்டணத்திற்கான வருமான வரி விலக்கு, இந்தியாவில் படித்தால் தான் உண்டு என்று என் நண்பர் கூறுவது சரியா?

என்.சம்பத், ராமாபுரம், சென்னை.


இல்லை. தப்பு. இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ எங்கு படித்தாலும், இந்த வருமான வரி விலக்கு உண்டு. அதாவது, உயர் கல்வி பயில்வதற்காக கல்விக் கடன் வாங்கியிருந்தால், அதற்கான மாதாந்திர தவணைத் தொகை எனப்படும் இ.எம்.ஐ., கட்டத் துவங்குவீர்கள். அப்போது, அதில் உள்ள வட்டி பகுதிக்கு மட்டும் வருமான வரிப் பிரிவு 80E கீழ் முழு வரி விலக்கு உண்டு. அசல் பகுதிக்கு வரி விலக்கு கிடையாது.

எத்தனை ஆண்டுகள் வரை, மாதாந்திர தவணைத் தொகை கட்டுகிறீர்களோ, அத்தனை ஆண்டுகள் வரை இந்த வரி விலக்கு பெறலாம். மேலும், இந்த வட்டிப் பகுதிக்கு உச்ச வரம்பு கிடையாது. வட்டி பகுதி முழுவதையுமே காண்பித்து, வரி விலக்கு கோரலாம். இந்த விலக்கைக் கோருவதற்கு நீங்கள் கல்விக் கடன் பெற்ற வங்கியில் இருந்து ஒரு சான்றிதழ் பெறவேண்டும். அதில் வட்டி பகுதி எவ்வளவு, அசல் பகுதி எவ்வளவு என்பது பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டே நீங்கள் வரி விலக்கு கோரலாம்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்



ph:98410 53881

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us