ADDED : ஜன 20, 2026 01:56 AM

ஆதார் விபரங்களை புதுப்பிக்க தவறினால், 'எஸ்.பி.ஐ., யோனோ' செயலி முடக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் போலியானது என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தகவல் சரிபார்ப்பு குழு தெரிவித்து உள்ளது.
மேலும் அந்த குழு தெரிவித்துள்ளதாவது:
சமூக ஊடகங்களில், 'எஸ்.பி.ஐ., யோனோ பயனர்கள், ஆதார் விபரங்களை உடனடியாக அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதை, இந்த குறுஞ்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள ஏ.பி.கே., பைலை பதிவிறக்கம் செய்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். தவறினால், எஸ்.பி.ஐ., யோனோ செயலி முடக்கப்படும்' என்ற செய்தியை மோசடியாளர்கள் பரப்பி வருகின்றனர்.
ஆனால், இது போலியான ஒன்று. எஸ்.பி.ஐ.,வாடிக்கையாளர்கள், எந்தவொரு ஏ.பி.கே., பைலையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை அல்லது ஆதார் எண், வங்கி ஓ.டி.பி., அல்லது தனிப்பட்ட விபரங்களை யாருடனும் பகிர வேண்டியதில்லை.
எஸ்.பி.ஐ., ஒருபோதும் தன் வாடிக்கையாளர்களிடம் ஆதார் விபரங்களை, ஏ.பி.கே., பைல்ஸ் வாயிலாக அப்டேட் செய்யுமாறு கேட்பதில்லை. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

