ADDED : ஏப் 18, 2024 04:29 AM

பெங்களூரு, : காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தி, பா.ஜ.,வில் இணைந்தார்.
பெங்களூரு, புலிகேசிநகர் சட்டசபை தொகுதியில், 2013ல் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அகண்ட சீனிவாச மூர்த்தி.
பின், அவர் ம.ஜ.த.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் 'சீட்' கிடைக்கவில்லை.
அதிருப்தி அடைந்த அவர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக களமிறங்கி, தோல்வி அடைந்தார். தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு, எந்த கட்சிக்கும் வேலை செய்யாமல் ஒதுங்கி இருந்தார். அவரை பா.ஜ.,வுக்கு வரும்படி, தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அதன் அடிப்படையில், மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில், நேற்று அதிகாரப்பூர்வமாக பா.ஜ.,வில் இணைந்தார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கட்சி கொடியை வழங்கி வரவேற்றார்.
பின், அகண்ட சீனிவாச மூர்த்தி கூறியதாவது:
ஸ்ரீராம நவமி தினத்தன்று பா.ஜ.,வில் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கட்சியில் சேருவதற்கு, ஸ்ரீராமரின் ஆசிர்வாதமே காரணம். சாதாரண தொண்டராக பணியாற்ற தயாராக உள்ளேன். கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், மாநிலத்திலேயே அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவன் நான். ஆனால், 2023ல் எனக்கு சீட் வழங்கவில்லை. நான் செய்யாத தவறுக்கு, என் வீட்டை தீவைத்து கொளுத்தினர்.
புலிகேசிநகர் சட்டசபை தொகுதி, பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. இம்முறை, பா.ஜ., வேட்பாளர் ஷோபாவை, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பெங்., வடக்கு வேட்பாளர் ஷோபா, புலிகேசிநகர் தொகுதி தலைவர் முரளி உட்பட பலர் இருந்தனர்.

