ADDED : மே 27, 2024 02:20 AM

புவனேஸ்வர் : ஒடிசாவில் நடந்த தேர்தலின்போது, ஓட்டுச்சாவடியில் நீண்டநேரம் காத்திருந்த நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால் ஆத்திரமடைந்த பா.ஜ., வேட்பாளர், அதை கீழே போட்டு உடைத்தார். இதைஅடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. இங்குள்ள 21 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
மேலும், 147 சட்டசபை தொகுதிகளுக்கும் இதே காலக்கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம் மூன்றாம் கட்டத்துக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு, குர்தா சட்டசபை தொகுதியில் பா.ஜ., சார்பில் பிரசாந்த் ஜகதேவ் போட்டியிடுகிறார். தற்போது இவர், சிலிகா தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவின்போது இவர், தன் மனைவியுடன் கவுன்ரிபாட்னா பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப் போடச் சென்றார்.
ஓட்டுச்சாவடியில் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த ஜகதேவ், தாமதத்திற்கான காரணம் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டார். அப்போது, ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ., வேட்பாளர் ஜகதேவ், ஓட்டுச்சாவடியில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்து கீழே வீசி உடைத்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தேர்தல் நடத்தும் அதிகாரி, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் ஜகதேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்திற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இது, அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்றும், ஓட்டுச்சாவடி மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ., சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

