ADDED : மே 20, 2024 09:14 PM

பெங்களூரு: கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிப்பதால், அசைவ உணவு பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, மக்களை வறுத்தெடுத்தது. வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதற்கு அஞ்சும் சூழ்நிலை இருந்தது. பல மாவட்டங்களில், வெப்பநிலை 45 டிகிரி செல்ஷியஸை தாண்டியது.
பொதுவாக கோடை காலத்தில், பலரும் அசைவ உணவு சாப்பிடுவது குறைவு. இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. சில வாரங்களாக பரவலாக மழை பெய்வதால், வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அசைவ உணவு வகைகளை விரும்புகின்றனர். இவ்வேளையில் கோழி இறைச்சி, முட்டை விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கோழி இறைச்சி விலை, கிலோவுக்கு 300 ரூபாய் வரை விற்கப்பட்டது. இப்போது 380 ரூபாயாக அதிகரித்துள்ளது. 650 முதல் 700 ரூபாய் வரை இருந்த, ஆட்டுக்கறி விலை தற்போது 800 ரூபாயாக அதிகரித்துள்ளது. முட்டை விலை ஏழு ரூபாயில் இருந்து எட்டு ரூபாயாக உயர்ந்துள்ளது.
கோடை காலத்தில் வெப்பம் அதிகம் இருந்ததால், நடப்பாண்டு கோழி வளர்க்க முடியவில்லை. சூடு தாங்காமல் பல ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. தேவைக்கு தகுந்தபடி உற்பத்தி இல்லாததால், விலை அதிகரித்துள்ளது. ஒரு மாதம் வரை, இதே சூழ்நிலை இருக்கும். விலை மேலும் அதிகரிக்கலாம் என, வியாபாரிகள் கூறியுள்ளனர்.
காய்கறிகள் விலையுடன் இறைச்சி, முட்டை விலையும் அதிகரித்துள்ளது. எதை சாப்பிடுவது என பலரும் புலம்புகின்றனர்.

