காங்., 20 இடங்களில் வெற்றி பெறும்: சிவகுமார் உறுதி
காங்., 20 இடங்களில் வெற்றி பெறும்: சிவகுமார் உறுதி
ADDED : ஏப் 02, 2024 11:11 PM

பெங்களூரு : கர்நாடகாவில் 28 தொகுதிகளில் வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என, 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், 'இண்டியா' கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், கர்நாடக ஆம் ஆத்மி தலைவர் முக்கிய மந்திரி சந்துரு, கர்நாடக தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி உட்பட 10 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றி பெற, 'இண்டியா' கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
தேவகவுடா தோல்வி
பின்னர் துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
'இண்டியா' கூட்டணி தேசிய தலைவர்களின் முதல் கூட்டம், பெங்களூரில் தான் நடந்தது. நாட்டில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்து, இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இண்டியா கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலை, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்து சந்தித்தன. துமகூரில் போட்டியிட்ட தேவகவுடா 12,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். அந்த தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 17,000 ஓட்டுகள் பெற்றதால், தேவகவுடா தோற்க நேரிட்டது.
இம்முறை அதுபோன்று ஏற்படக் கூடாது என்பதற்காக, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து உள்ளோம். பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இணைந்து செயல்படுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியை, தோற்கடிப்பது எங்கள் இலக்கு. கடந்த காலங்களில் தேர்தல்களை வெவ்வேறு வழிகளில் சந்தித்து உள்ளோம். தற்போது நாட்டை காப்பாற்ற, ஒருங்கிணைந்து உள்ளோம்.
வகுப்புவாத சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகம் என்பது, எங்களின் முக்கிய முழக்கம். ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுவோம். கர்நாடகா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வறட்சி நிவாரணம் ஏன் கொடுக்கவில்லை என்பதற்கு, விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தலுக்காக கர்நாடகா வருகின்றனர். நாங்கள் கடத்திய கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும்.
மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறி உள்ள கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி. சாம்ராஜ் நகரில் துருவநாராயணா ஒரு ஓட்டில் வெற்றி பெற்றார். சவுமியா ரெட்டி 16 ஓட்டுகளில் தோற்றார். தேர்தலில் ஓவ்வொரு ஓட்டும் முக்கியமானது. நாட்டை பிரிக்க வேண்டுமென, எம்.பி., சுரேஷ் பேசவில்லை.
பிரதமருக்கு நன்றி
வரி பங்கீட்டில் அநியாயம் நடந்தால், நாட்டை பிரிக்க வேண்டும் என்று, மக்கள் கேட்கும் சூழ்நிலை ஏற்படும் என்று தான் கூறினார். உத்தரகண்ட் பிரசாரத்தில் சுரேஷை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அவரை நினைவு வைத்து பேசியதற்காக, பிரதமருக்கு எனது நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

